×

ஆனைக்கோட்டை அகழ்வாய்வும் – கோவேத முத்திரையும்

ஆனைக்கோட்டை என்பது இலங்கையின் வடமாகாணத்தின் ஒரு பகுதியாக உள்ள யாழ்ப்பாணக் குடா நாட்டின் வலிகாமம் தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஊராகும்.

நாவாந்துறைப் பகுதியைச் சீர்செய்வதற்காக கரையாம்பிட்டி மண்மேட்டை வெட்டியபோது இதில் காணப்பட்ட பண்பாட்டு எச்சங்களை 1980 களில் பேராசிரியர் இந்திரபாலா தலைமையில் அகழ்வாராய்ச்சி இடம்பெற்றது. இங்கு இரண்டு சதுர மைல் பரப்பில் ஆறு குடியிருப்பு  மையங்களும், இரண்டு ஏக்கர் பரப்பில் பெருங்கற்கால ஈமச் சின்னங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் பின்னர் பேராசிரியர் இந்திரபாலா மேற்கொண்ட அகழ்வின் போது இரு இடங்களில் பெருங்கற்கால மக்களது ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விரு ஈமச்சின்ன மையங்களும் பத்து அடி, இடைவெளியில் நான்கு அடி உயரம் கொண்ட மண்மேட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

ஈமச்சின்ன மையங்களில் 5 அடி உயரமுடைய இரு மனித எலும்புக்கூடுகள் கிழக்கு மேற்கு திசையை நோக்கிய வண்ணமாக அடக்கம் செய்யப்படிருந்தன. இதில் இரு கைகளும் கட்டப்பட்ட எலும்புக்கூட்டைச் சுற்றி வைக்கப்பட்ட மட்பாண்டங்களில் கறுப்பு சிவப்பு , தனிக் கறுப்பு சிவப்பு நிறக்கிண்ணங்கள், வட்டில்கள் , பானைகள் என்பன குறிப்பிடத்தக்கன. சில மட்பாண்டங்களில் சுறா மீன், மிருக எலும்புகள், நண்டின் ஓடுகள் என்பவற்றுடன் சிற்பி , சங்கு போன்ற பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. இப்பண்பாடு இங்கு இரும்பின் பயன்பாடு புழக்கத்தில் வந்ததனை உறுதிப்படுத்த இரும்புக்கருவிகளும் ,கழிவிரும்புகளும் கிடைத்துள்ளன.

சிற்பி , சங்கு சுறா மீன் எலும்புகள் இலங்கைப்  பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களது கலை மரபுகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. அதே சமயம் ஆனைக்கோட்டை மையம் கடலுடன் கொண்ட தொடர்பையும் காட்டுகின்றது . வடமாகாணத்தினைப் பொறுத்தவரை இங்கு கிடைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் இரண்டாவது ஆகும். முதலாவது, திருக்கேதீஸ்வரத்தில் மறைந்த திரு. சண்முகநாதன் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின்போதுகிடைத்தன.

ஆனைக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டம், லட்சுமி நாணயம், உரோம மட்பாண்டம் என்பவறை ஆதாரமாக கொண்டு இரு ஈமச்சின்னங்களும் இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால மக்களுக்குரியது என உறுதிப் படுத்தமுடிகின்றது.

எலும்புக்கூட்டின் தலை மாட்டின் அருகில் பெறப்பட்ட வெண்கல முத்திரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காலம் கி.மு 3 நூற்றாண்டு 1.7 , 1.5 சென்ரி மீற்றர்  நீள அகலம் உடையது .இதன் மேல் வரிசையில் 3 குறியீடுகளும் கீழ் வரிசையில் 3 பிராமி எழுத்துக்களும் உள்ளன. இது மோதிரத்தின் முன் பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்டுகின்றது . இது எதானால் செய்யப்பட்டது என்பது தொடர்பாக கருத்து முரண்பாடுகள் இருந்து வருகின்றன. பேராசிரியர் கா. இந்திரபாலா இந்த முத்திரையானது உலோக முத்திரை எனத் தமிழக இந்து பத்திரிகையில் 1981 இல் எழுதிய கட்டுரையில் கூறியிருந்தார்.

ஆனால், அவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்பதைக் குறிப்பாகக் குறிப்பிடவில்லை. பொ.இரகுபதி (1987) இந்த முத்திரையானது வெண்கலத்தினால் செய்யப்பட்டது என்றுள்ளார். ஐராவதம் மகாதேவனும் (2003), பேராசிரியர் சி. பத்மநாதனும் (2006),அது உலோகத்தால் ஆனது என்றுள்ள போதும், அது எந்த உலோகத்தினால், அல்லது உலோகக்கலவையால் ஆனது என்பதைக் குறிப்பாகக் கூறவில்லை.

எப்படிப் பட்டதாயினும் க. இந்திரபாலா 2006ஆம் ஆண்டில் எழுதியிருந்த நூலில், அது மாவுக்கல்லால் (Soapstone) ஆனது என்றுள்ளார். இதனைப் பேராசிரியர், இம் முத்திரையில் கீழ் வரியில் அடங்கியுள்ள மூன்று எழுத்துக்களையும் இடப்பக்கத்தில் காணப்படும் எழுத்துக்கு மேலுள்ள புள்ளியையும் பிராமிப் பகுதியாகக் கொண்டுள்ளார்.

இதில் இடப்பக்கமிருந்து பார்க்கும் போது முதலாவது எழுத்து “கோ”, இரண்டாவது எழுத்து “வே”,மூன்றாவது எழுத்து “த”. இது முத்திரையிடப் பயன்படுத்தும் அச்சு ஆதலால், இடப்படும்  முத்திரையில் இடம் வலமாக மாறிவிடும்.  ஆதலால் எழுத்து வரிசை “கோ” “வே” “த” என்று அமையும். “த” வின் மேலுள்ள புள்ளியை அனுஸ்வரமாகக் (அனுஸ்வரம் என்றால் ஒரே சமயத்தில் வாயினாலும், மூக்கினாலும் உச்சரிக்கப்படும் எழுத்துக்களைக் குறிக்கும்) கொண்டால் இச் சொல்லை” கோவேந்த” அல்லது ” கோவேதன்” என இருவிதமாக வாசிக்க முடியும் எனக் கூறுகிறார்.

இரண்டுமே திராவிடப் பெயராகவும், ஒரே பொருள் தருவனவாகவும் உள்ளன.” கோவேந்த” என்பதை ” கோ” + ” வேந்த” என இரண்டாகப் பிரிக்கலாம். இரண்டு பகுதிகளுமே தமிழிலும் வேறு சில திராவிட மொழிகளிலும் மன்னன், அரசன் என்னும் பொருள்படுவனவே. கோவேதன் என்று எடுத்துக்கொண்டாலும் கூட இது போலவே அமையும். மேல் வரிசையில் சூல வடிவக் குறியீடு அடுத்தடுத்து இருமுறை இடம்பெற்றுள்ளது.

இக்குறியீடுகள் ஒலிப்பையன்றிப் பொருளையே சுட்டுவனவாதலால் “கோ” என்பதைக் குறித்த சூல வடிவமே, அதே பொருள் கொண்ட “வேந்த” அல்லது “வேதன்” என்னும் சொல்லையும் குறித்தது. இரகுபதியின் வாசிப்பு , இதனைச் சற்று வேறு விதமாக வாசித்துள்ளார்.

இவர், இந்திரபாலாவால் அனுஸ்வரமாகக் கொள்ளப்பட்டு பிராமியுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட புள்ளியை முதல் வரியின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளார். இவர்,கீழ் வரி “கோ” “வே” “த” என்பது “கோ” + “வேத்” + “அ” எனப் பிரிந்து”கோவேதனுடைய” என்னும் பொருள் கொடுக்கும் என்றும் இதற்கு இணையாக இரண்டு சூலக்குறியீடுகள் “கோ” “வேத்” என்பவற்றைக் குறிக்க, புள்ளி “உடைய” என்னும் பொருள் கொண்ட “அ” என்னும் உருபைக் குறித்தது என்கிறார். வாசிப்புமுனைவர் ஆர். மதிவாணன் பிராமிப் பகுதியை அந்த முத்திரையில் காணப்பட்டவாறே இடமிருந்து வலமாக “தி” “வு” “கோ” என வாசித்து, அது தீவின் அரசன் என்னும் பொருள் தரும் என்றார்.

கீழடிக்கு பிந்திய வெறும் 300 ஆண்டு கொண்ட ஆனைக்கோட்டை மன்னர்கள் தாம்.கரையான் பிட்டியின் சொந்தக்காரர், 1984 ஆம் ஆண்டில் 2600 வருடம் பழமையான மக்கள் என நிருபிக்க தமிழ் பூர்வீகக் குடிகளை மறந்து வாழும் மக்களுக்காக மீண்டும் ஒரு நினைவூட்டல். இப்பதிவு பெருங்கற்கால மையங்களில் ஒன்றான ஆனைக்கோட்டை என கட்டுரையாசிரியர் ஆனையூரான் எனப்படும் ஜெராட் குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆனைக்கோட்டை முத்திரை வரலாற்றுக்கு முற்பட்ட காலமானது பழங்கற்காலம் , இடைகற்காலம், புதியகற்காலம் என வளர்ச்சியடைந்து வந்த நிலையில் வரலாற்றுக் காலத்திற்கான ஆக்கமும் அடிப்படையும் கொடுக்கின்ற வகையில் தோற்றம் பெற்ற ஒரு பண்பாட்டு வாழ்க்கை முறையே பெருங்கற்காலம் ஆகும். அந்த வகையில் பெருங்கற்காலம் என்றால் என்ன எனப் பார்க்கின்ற பொழுது இறந்தோரை அடக்கம் செய்வதற்குப் பெருங்கற்களால் ஈமச் சின்னங்களை அமைத்ததால் இக் காலம் பெருங்கற்காலம் எனப் பெயர் பெற்றது.

இச்சின்னங்கள் வெளித்தோற்றத்தினைக் கொண்டு இவை கல்லறை,கல்மேசை,கந்திட்டை, நடுகல் , கல்வட்டம் போன்ற பெயர்களைப் பெற்றன, எனினும் இக்காலமக்கள் முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே தமது ஈமச் சின்னங்களை அமைக்கவில்லை. தாழிகளிலும் குழிகளிலும் இறந்தோரை அடக்கம் செய்தார்கள். இதனை மணிமேகலையில்‘’சுடுவோர் இடுவோர் தொடு குழிப்படுவோர் தாழ்வயினடைப் போர் தாழியிற் கவிப்போர்” எனினும் இக் காலம் பெருங்கற்களாலே ஈமச்சின்னங்கள் காணப்பட்டதால் பெருங்கற்காலக் கலாசாரம் எனப்பட்டது.

இவர்கள் விட்டுச் சென்ற தடயங்கள் மற்றும் இவர்களைப் பற்றி நாம் அறிய உதவும்சான்றுகள் எனப் பார்க்கின்ற பொழுது கல்லறைகள் ,ஈமத்தாழிகள் , சுடுமண்பாறைகள்,விளையாட்டுப் பொருட்கள் , மட்பாண்டங்கள் , ஆயுதங்கள், பாறை ஓவியங்கள் ,அணிகலன்கள், மணிகள், முத்திரைகள், போன்ற பொருட்கள் உதவுகின்றன.பெருங் கற்காலப் பண்பாட்டிற்குரிய சிறப்பம்சங்களாக இரும்பின் அறிமுகம், நீர்ப்பாசனத்துடன் கூடிய பயிர்ச்செய்கை , கறுப்பு, சிவப்பு மட்பாண்ட உபயோகம் கட்டமைப்புடைய சமூகத்தோற்றம் போன்றன காணப்படுகின்றன.

இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடானது தென்னிந்தியாவில் இருந்து மட்டுமல்லாது தென்கிழக்காசியாவிலிருந்தும் பரவியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கி .மு1000 ஆண்டுகள் தொடக்கம் கி.பி 4 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பெருங்கற்காலப் பண்பாடு வளர்ச்சியடைந்த நிலையைக் காணக்கூடியதாக உள்ளது.

இலங்கையில் பெருங்கற்காலத்தின் மிக முந்திய தோற்றப்பாடு அனுராதபுரத்திலும், சிகிரியா அலிகல ஒதுக்கிடத்திலும் கி.மு1000 ஆண்டுகள் தொடக்கம் கி.மு 800 வரையான காலப்பகுதிக்கு உட்பட்ட சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டு காபன் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களது கலை மரபுகள் தென்னிந்தியப்  பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்புபட்டிருந்தாலும் கூடத் தனித்துவமானதாகவும் விளங்குகின்றது. தீவகப் பிராந்தியத்திற்கான இயல்புகளை இலங்கைப் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களது கலை மரபுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

உதாரணமாக முருங்கைக் கற்களாலான  ஈமக் கோபுரங்கள், சிப்பியின் படையல்கள், சுறா முள்ளில் செயப்பட்ட மாலைகள் ,முதலியன தனித்துவமானவை .இலங்கையின் பெருங்கற்கால பண்பாட்டு மையங்களின் பரவலானது வடபகுதியில் இருந்து தென்பகுதி வரை காணப்படுகின்றது.

இருபதுக்கு மேற்பட்ட பெருங்கற்காலக் கலாசார மையங்கள் இலங்கையில் இனம் காணப்பட்டுள்ளன. காரைநகர், ஆனைக்கோட்டை , கந்தரோடை,வல்லிபுரம், பூநகரி,மாந்தை, தேக்கம் ,பொம்பரிப்பு ,அக்குறுகொடை ,அனுராதபுரம்,கதிர்காமம், இபன்கட்டுவை, அம்பாந்தோட்டை போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள பெருங்கற்கால பண்பாட்டு மையங்கள் இரு பெரும்பிரிவுகளாக வகுத்து ஆராய்ந்துள்ளன,  என்கிறார் பேராசிரியர் ராகுபதி.

எந்த ஒரு பௌத்த செல்வாக்குகளும் அற்ற நிலையில் வேர் ஊன்றி இருந்த பெருங்கற்கால பண்பாட்டை (பௌத்த வருகைக்கு முன்னர்) வளர்த்தெடுத்த மையங்கள் ஆனைக்கோட்டை , காரைநகர் என்பனவே .பௌத்தமதத்துடன் இணைந்து காணப்பட்ட பெருங்கற்கால பண்பாட்டு மையங்களில்  வட இலங்கையின் முக்கியமான தொல்லியல் மையங்களில் ஒன்றாக ஆனைக்கோட்டை காணப்படுகின்றது.

1980 களில் குடாநாட்டில் உள்ள நாற்பது புராதன மையங்கள் அடையாளப் படுத்திய பேராசிரியர் பொ. இரகுபதி அதன் தலைமை குடியிருப்பாக கந்தரோடையைக்  குறிப்பிடுகின்றார்.

ஆனால், இக் குடியிருப்புக்களை பெருங்கற்கால மக்களது பண்பாடடின் சிறப்பாக காணப்படும் ஈமச்சின்னம் கந்தரோடையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் ஆனைக்கோட்டையில் கண்டு பிடிக்கப்பட்டது .பூர்விக வரலாறு பற்றிய ஆய்வில் ஆனைக்கோட்டை முக்கியம் பெறுகின்றது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments