
யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை 21,22 அக்டோபர் 1987
யாழ் நகரத்தின் கிழக்குப் புறமாக நகரில் அமைந்துள்ள யாழ். போதனா வைத்தியசாலை யாழ் குடாநாட்டில் வாழ்கின்ற எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிற்கு மட்டுமன்றி அயல் மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களிற்கும் பிரதான வைத்தியசாலையாக உள்ளது. தினசரி ஆயிரம் பேர் வரையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதோடு, பல கட்டட வசதிகளுடன், சத்திரசிகிச்சைப் பிரிவு, அவசர சத்திரசிகிச்சைப் பிரிவு எனப் பல பிரிவுகளுடனும் 1970களிலிருந்து இயங்கி வருகிறது.
1987ஆம் ஆண்டு அக்டோபர்; பத்தாம் நாள் இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் தொடங்கியதிலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற போரின்மூலம் யாழ்நகரைக் கைப்பற்றும் முயற்சியில் இந்திய இராணுவத்தினர் ஈடுபட்டார்கள்.
யாழ்ப்பாணக் கோட்டையில் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவத்தினர் யாழ் நகரப்பகுதி மீது பெருமளவு எறிகணைத் தாக்குதல், விமானத் தாக்குதலை மேற்கொண்டிருந்தபோதும் யாழ். வைத்தியசாலையில் வைத்தியர்கள், ஊழியர்கள், தாதிமார் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கான வைத்திய சேவையை வழங்கிப் பல உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள்.
1987 அக்டோபர் இருபத்தோராம் திகதி இந்தியப்படையினர் எறிகணை வீச்சு, விமானத் தாக்குதல்களை நடத்தியவாறு யாழ். நகரை நோக்கி முன்னேறினார்கள். யாழ். வைத்தியசாலையில் பணிகளில் ஈடுபட்ட வைத்தியர்கள், ஊழியர்கள், சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் போன்றோர் பாதுகாப்பிற்காக, வைத்தியசாலை எக்ஸ்றே பிரிவு அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் பாதுகாப்பு தேடினார்கள். பிற்பகல் 3.00 மணியளவில் யாழ் நகரப் பகுதிக்குள் இந்திய இராணுவம் உள்நுழைந்தது. பின்னர் 4.30 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவம் அலுவலகப் பகுதியில் வைத்தியசாலைச் சீருடையுடன் இருந்த ஊழியர்கள், நோயாளர் வண்டில், கட்டில், பாய், வாங்குகளிற் படுத்திருந்த நோயாளர்கள் என எல்லோரையும் சுட்டுப்படுகொலை செய்தது. கடமையில் இருந்த 21 ஊழியர்களும் 46 நோயாளர்களும் பார்வையாளர்களும் இப்படுகொலையில் கொல்லப்பட்டார்கள். எனினும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் மொத்தத்தில் 135 மக்கள் கொல்லப்பட்டதாகச் சொன்னார்கள். அந்நேரத்தில் ஏனையவர்கள் கதைத்தவற்றை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் இத்தொகை சொல்லப்பட்டிருக்கவேண்டும்.
கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் மூன்று நாட்களாக வைத்தியசாலையிலேயே இருந்தன. அதன் பின்னரேயே வைத்தியசாலை குப்பைத்தொட்டியில் போட்டு எரிக்கப்பட்டன. கொல்லப்பட்ட 21 வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்களையும், 46 நோயாளர்களையும் நினைவுகூர்ந்து வருடந்தோறும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
முருகன் வீதி, உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த சண்முகலிங்கம் லோகநாயகி தன்னுடைய வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறுகின்றார், ‘என்னுடைய கணவர் வைத்திலிங்கம் சண்முகலிங்கம் யாழ்ப்பாண பொதுவைத்தியசாலையில் நோயாளர் காவுவண்டிச் சாரதியாக இருந்தார். எறிகணைத் தாக்குதலில் எமது வீடு அகப்பட்டது. நான் எனது பிள்ளைகளுடன் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியசாலை விடுதியில் அவருடன் தங்கியிருந்தேன். ஒக்ரோபர் 21 ஆம் திகதி கணவர் இரு பிள்ளைகளுடன் மேற்பார்வையாளர் அலுவலகத்தில் இருந்தார். நான் மற்றைய இரு பிள்ளைகளுடனும் எக்ஸ்-கதிர் அறையில் தங்கியிருந்தேன். வைத்தியசாலையைச் சுற்றி துப்பாக்கிச் சூடுகளும் எறிகணைகள் விழுந்து வெடிக்கும் சத்தங்களும் கேட்டவண்ணமிருந்தன. வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திப்படையினர் கண்ணில் அகப்படும் அனைவரையும் சுட்டுத்தள்ளத் தொடங்கினர். பின்னர், அவர்கள், எக்ஸ்-கதிர் அறைக்குள் நுழைந்து கைக்குண்டுகளை வீசி துப்பாக்கிப் பிரயோகமும் செய்தார்கள். அடுத்தநாள் மாலை 5 மணியளவில் நான் மேற்பார்வையாளர் அறைக்குச் சென்றபோது, கணவருடைய சடலத்தைக் கண்டேன். அவருடன் தங்கியிருந்த இரு பிள்ளைகளும் வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடுகள் தொடங்கியவுடனேயே வைத்தியசாலையை விட்டு வெளியேறியிருந்தார்கள். என்னுடைய கடைசிப் பிள்ளை காயமடைந்திருந்தது, அவருடைய அண்ணா அவரை ஆனைப்பந்தி வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றார்.’
காளிகோவிலடி, அளவெட்டி வடக்கு, அளவெட்டியைச் சேர்ந்த தவமணி ராஜரட்ணம் தனது வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறுகின்றார், ‘என்னுடைய கணவர் ஆரியக்குட்டி ராஜரட்ணம் முழங்கால் சத்திர சிகிச்சைக்காக ஒக்ரோபர் 18 ஆம் திகதி யாழ்ப்பாண பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஒக்ரோபர் 23 ஆம் திகதி, இந்தியப் படையினர் வைத்தியசாலைக்குள் நுழைந்து, பல நோயாளர்களையும் ஊழியர்களையும் சுட்டுக்கொன்றுவிட்டதாக நான் கேள்விப்பட்டேன். ஆனால், இந்தியப் படைகள் வைத்தியசாலையை ஆக்கிரமித்திருந்ததால் எவருமே அங்கு செல்லத் துணியவில்லை. நவம்பர் 15 ஆம் திகதிதான், என்னுடைய மச்சாள் வைத்திசாலைக்குச் சென்றார். இந்தியப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் என்னுடைய கணவரும் ஒருவர் என வைத்தியசாலை ஊழியர்கள் மூலமாக அவர் அறிந்துகொண்டார்.’
அரசடி வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவிலைச் சேர்ந்த பசுபதீஸ்வரி கிருஸ்ணராஜா தன்னுடைய வாக்குமூலத்தில் இவ்வாறு கூறுகின்றார், ‘என்னுடைய கணவரும் பிள்ளைகளும் நானும் கோண்டாவிலிலுள்ள எமது வீட்டில் வசித்துவந்தோம்.
இந்தியப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து என்னுடைய கணவர் தான் மேற்பார்வையாளராக வேலை செய்த யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு எம்மைக் கூட்டிச்சென்றார். ஒக்ரோபர்; 12 ஆம் திகதி முதல் வைத்தியசாலைலிருந்த அவருடைய அறையிலேயே தங்கியிருந்தோம். ஒக்ரோபர் 21 ஆம் திகதி, வைத்தியாசாலைக்குள் நுழைந்த இந்தியப் படையினர் அங்கிருந்த வைத்தியசாலை ஊழியர்கள், நோயார்கள், பார்வையாளர்கள் எனப் பலரையும் சுட்டுக்கொன்றார்கள். கடமையிலிருந்த என் கணவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். என்னுடைய கணவர் உட்பட கொல்லப்பட்டவர்களின் சடலங்களை இந்தியப் படைகள் வைத்தியசாலை வளாகத்திலேயே போட்டு எரித்தார்கள்.’
168, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வராஜா நாகேஸ்வரி என்பவர் தன்னுடைய வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறுகின்றார், ‘என்னுடைய கணவர் அரசாங்கப் போதனா வைத்தியசாலையில் மேற்பார்வையாளராக வேலைசெய்தார். ஒக்ரோபர் 21 ஆம் திகதி, காலை 6.30 மணிக்கு அவர் வீட்டிலிருந்து புறப்பட்டார். அன்று மதியம் இன்சுலின் ஊசி போடுவதற்காக என்னுடைய மகன் என்னை அங்கு கூட்டிச்சென்றார். நான் வைத்தியசாலைக்குள் நுழைந்தபோது வைத்தியசாலை ஊழியர்களும் நோயாளர்களும் பயந்தநிலையிலிருப்பதைக் கண்டேன். வைத்தியசாலையை நோக்கி எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
வெளிநோயாளர்களையும், வைத்தியசாலை ஊழியர்களையும் பார்வையாளர்களையும் கீழ் மாடி நிருவாகப் பகுதி இருந்த மண்டபத்தில் பாதுகாப்பாக இருக்குமாறு கூறப்பட்டது. அங்கு காப்பு எடுத்தவர்களில் என்னுடைய கணவரும் என்னுடைய மகனும் நானும் அடங்குவோம். மாலை நான்கு மணியாகியும் நாம் அனைவரும் அங்கேயே இருந்தோம். ஏறத்தாள அதே நேரத்தில் அம் மண்டபத்தின் வீதியோர நுழைவாயிலூடாக சீருடையில் வந்த இந்திய இராணுவத்தினர் அங்கு நாம் காப்பெடுத்திருந்ததைக் கண்டு சுடத்தொடங்கினார்கள். நாம் அனைவரும் நிலத்தில் விழுந்து படுத்துக்கொண்டோம். நான் சற்றுப் பின்நகர்ந்தேன். ஆனால் கையெறிகுண்டுத்தாக்குதலில் நான் காயமடைந்தேன். மெதுவாக ஊர்ந்து கணவருக்கு அருகில் சென்றேன். ஆனால் அவர் இறந்திருந்தார்.
இறந்தவர்களின் சடலங்களும், காயமடைந்தவர்களும் காயமின்றித் தப்பித்தவர்களும் அடுத்தநாள் காலை 10 அல்லது 11 மணிவரை அந்த மண்டபத்திலேயே இருந்தனர். அதற்குப் பின்னர்தான் வைத்தியசாலை அதிகாரிகள் வந்து வெளியில் வருமாறு அழைத்தார்கள். என்னுடைய கணவரின் சடலம் உட்பட இறந்தவர்கள் அனைவரது சடலங்களும் மண்டபத்திலேயே இருந்தன. ஒக்ரோபர் 23 ஆம் திகதி என்னுயை மகனும் நானுமாக என் கணவரின் சடலத்தை இனங்காட்டினோம். வைத்தியசாலைக் குப்பைக்கிடக்கில் அனைத்து சடலங்களையும் ஒன்றாகப் போட்டு எரித்ததாக என்னுடைய மகன் பின்னர் கூறினார்.’
இச்சம்பவம் நடந்து சில வாரங்களுக்குப் பின்னர் வெளிவந்த (யு3 அளவிலான) ளுயவரசனயல சுநஎநைற என்னும் உள்ளுர்
1 செய்தித்தாளில் இப்படுகொலை பற்றிய செய்தி வெளிவந்தது. அது கீழே தரப்பட்டுள்ளது. அப்பக்கத்தில் 1-4 இலக்கமிடப்பட்ட மூன்று பகுதிகள் பெரிதாக்கப்பட்டு வாசிக்கக்கூடியளவு
2 தெளிவாகவும் தரப்பட்டுள்ளன.
பெரிதாக்கப்படாத இடத்தில் இதில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களே உள்ளன. அவை இப்புத்தகத்தின் ஏனைய பகுதிகளில் உள்ளதைப் போன்று சாதாரண 4 வடிவத்திலேயே தரப்பட்டுள்ளன.
கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் (இல பெயர் தொழில் வயது)
காயமடைந்தவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (இல பெயர் தொழில் வயது) இல பெயர் தொழில் வயது
![]()