
கிளிநொச்சி நகர் படுகொலைகள் – 1996-1998
1996ல் சத்ஜெய – 01 என்று பெயரிடப்பட்ட தாக்குதல் நடவடிக்கையை சிங்கள இராணுவம் நடத்தியது. இந்த நடவடிக்கை மூலம் தெற்கே ஆணையிறவு முகாமிலிருந்து இராணுவம் கிளிநொச்சியை நோக்கி நகர்ந்தது. இதன்போது பரந்தன் என்னுமிடத்தில் ஒரு இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. இந்த முகாமிலிருந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்கள் வாழுமிடங்களில் ஊடுருவி அங்கிருந்த மக்களையும் அங்கு சென்று தங்களின் உடைமைகளை எடுக்க வரும் இடம்பெயர்ந்த மக்களையும் தாக்கி கொன்றனர்.
1996 ஆகஸ்ட்டில் சத்ஜெய – 02 என்னும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனுடைய தொடர்ச்சியாக சத்ஜெய – 03 என்னும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையால், இராணுவம் கிளிநொச்சி நகருக்குள் நுழைந்தது.
இங்கு இராணுவம் மக்கள் குடியிருப்புக்களிலும், அவர்களின் வயல் வெளிகளிலும் இராணுவ முகாம்களை உருவாக்கியது.
அப்படி அமைக்கப்பட்ட முகாமிலிருந்து, சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மக்கள் மீது பல தாக்குதல்களை செய்தது. அப்பகுதியிலிருந்து 184 பொதுமக்கள் காணாமல் போய் உள்ளனர். மக்கள் பிற்காலத்தில் அவர்களின் குடியிருப்புகளுக்கு திரும்பியபோது, அங்குள்ள கழிவறைகளிலும், கிணற்றுப் பகுதிகளிலும் கொல்லப்பட்டவர்களின் எழும்புக் கூடுகளை கண்டெடுத்தனர்.
பலவகைகளில் ஆதாரங்களை சேகரித்தபோது, இப்படியாக 184 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்தது. கிளிநொச்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் இவ்வாறு கொல்லப்பட்ட 72 பேருடைய எழும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் 12 பேரின் எழும்புக்கூடுகள் அவர்கள் அணிந்திருந்த துணிகள் மற்றும் பிற பொருட்களை வைத்து, உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டது.
இப்படி கொல்லப்பட்ட நபர்களின் குடும்பங்கள் இன்று மிக வறிய நிலையில் அக்கரையான், மல்லாவி, ஜெயபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு போன்ற கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
![]()