
குருநகர் தேவாலயம் படுகொலை – 13 நவம்பர் 1993
குருநகர்க்கிராமம் யாழ்ப்பாண நகரத்திலிருந்து தெற்குப்புறமாக இரண்டுமைல் தூரத்தில் கடற்கரை யோரமாக அமைந்துளள்து. குருநகர்ப் பகுதியில் 1861ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1881ஆம் ஆண்டு புனித யாகப்பர் ஆலயம் அமைக்கப்பட்டது. இவ்வாலயச் சூழலில் 1973ஆம் ஆண்டு இறந்த அருட்திரு யோசவ் றேயை’ அவர்கள் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்ட நினைவுக்கல்லும் உள்ளது.
13.11.1993 அன்று சனிக்கிழமை காலை 7:20மணிக்கு அவ்வுர் மக்கள் இறைவழிபாட்டுக்காக ஆலயத்தில் ஒன்று கூடியிருந்த நேரம் குடாநாட்டு வான்பரப்பிற்குள் பிரவேசித்த விமானப்படையின் விமானங்கள் குண்டுகளை வீசின. இவ்வாலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்தவர்களில் பதின்மூன்று பேர் உயிரிழக்க இருபத்தைந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததுடன், தேவலாயமும் சேதமடைந்தது.
குருநகர் புனித யாகப்பர் தேவாலயம் மீதான தாக்குதலை அரசியற் தலைவர்களோடு உலகநாடுகள் பலவும் கண்டித்திருந்தன. தேவாலயத்தின் மீதான குண்டு வீச்சினால் மண்டபத்தினைத் தாங்கிய தூண்கள் துண்டங்களாகின. அந்தத் தூண்கள் இன்றும் யாகப்பர் சிலையின் அருகே ஞாபகச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளன. புனித யாகப்பர் ஆலயத்தில் உயிர் நீத்த மக்களின் நினைவாக குருநகர் மக்களால் ஆலயப் படிக்கட்டில் ‘நீதிக்கான நினைவாலயம்’ என்னும் நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் கிடைக்கப்பெற்ற விபரம் (பெயர் தொழில் வயது)
01. குரூஸ் அக்கினேஸ் ஓய்வுபெற்றவர் 60
02. கபிரியல் அன்ரன் கடற்றொழில் 48
03. அன்ரன் புஸ்பலீலா இல்லை 41
04. அன்ரன் அஞ்சலா குடும்பப்பெண் 40
05. அக்கினேஸ் குருசுப்பிள்ளை வயோதிபர் 80
06. ஆரோக்கியநாதர் சில்வன் சஜீவன் மாணவன் 18
07. ஜோன்லூத்து சேவியர் தொழிலாளி 45
08. தோமஸ் பெனடிற் கமம் 55
09. மேரி ஜெயசீலி தாசியஸ் வீட்டுப்பணி 50
10. மேரிசிந்துயா மதுரநாயகம் குழந்தை 2.5
11. மேரிவெண்ணிலா அந்தோனிப்பிள்ளை ஆசிரியை 27
12. சிங்கராயர் ஜானி கனோஜி மாணவன் 08
13. சிங்கராசா யூஜின் காமலிற்றா மாணவி 15
![]()