
மனசுக்குள் ஆயிரம் மத்தாப்பு விரித்த ஆனந்த வாழ்வே!
மனசுக்குள் ஆயிரம் மத்தாப்பு விரித்த ஆனந்த வாழ்வே!
மீண்டும் என்னில் படர்ந்து கொள்வாய்…..
என்று என்னைத் துறந்து போனாயோ அன்றிலிருந்து நான் அனாதையானேன். …
கண்திறந்து பாராய்…… அழகுக் கோலம் வற்றிய சடமாய்,
உயிர் சுமந்த கூடாய் உலவுகின்றேன்.
எனக்கென் ஊர்வேண்டும்.
வீடும், வயல்வெளியும் வேண்டும்.
கந்தகக்கலப்பில்லாத காற்றுவேண்டும்.
எந்தை எனக்களித்த முத்துமாரியம்மனின் பத்தாம் திருவிழா வேண்டும்.
ஊர்கூடி உட்கார்ந்து பார்க்கும் கூத்தும்; கும்மாளமும் வேண்டும்.
பசிக்கு ஏதேனும் கடித்து படுத்துறங்கவா நான்பிறந்தேன்?
எங்கேனும் என்றாலும் பரவாயில்லை உயிர்வாழ்தல் போதுமென வேரிழந்த வாழ்வு வேண்டாம்.
பச்சைத் தண்ணீர்மட்டும் குடிக்கும் பஞ்சவாழ்வானாலும் அது எந்தன் சொந்தவீட்டில் இருக்கட்டும்….
என்னைவிட்டொதுங்கிய இனிய வசந்தமே!
மீண்டும் வருக!
உயிர்க்குருவி உடற்கூடுவிட்டுப் பறக்கமுன்னர் ஒருமுறை ஊரிற்களிக்க வரமருள்.
எமதூரில் எமதூதர்களாம். மனைவியுடன் நானுறங்கிய கட்டில், பிள்ளையாடிய ஊஞ்சல், அப்புவின் சாய்மனைக்கதிரை, புதிரெடுக்கும் அரிவாள் எல்லாவற்றையும் எரித்திருத்தல்கூடும்.
இனிப்பொறுத்தல் இழிவு.
என்ன செய்யலாம்?
ஏதேனும் செய்தாக வேண்டும்.
– மாலிகா
– வெளிச்சம் ஐப்பசி 1995.