
வள்ளிபுனம் செஞ்சோலை படுகொலை – 14 ஆகஸ்ட் 2006
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்பிரிவில் உள்ள வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் 2006 ஓகஸ்ட் 10ஆம் நாள் முதல் நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ முதலுதவிப் பயிற்சிநெறியில் வன்னிப்பிரதேச கிளிநொச்சி, முல்லைத்தீவு கல்வி வலயங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான உயர்தர வகுப்பு மாணவிகள் பங்குபற்றியிருந்தனர். மாணவர்கள் பயிற்சி நெறியில் பங்குபற்றிக்கொண்டிருந்த வேளை இலங்கை வான்படைக்குச் சொந்தமான நான்கு கிபிர் விமானங்கள் செஞ்சோலை வளாகத்தில் 2006 ஒகஸ்ட் 14 அன்று காலை 7.30 மணியளவில் காலைக் கடன்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவிகள் மீது கண்மூடித்தனமான குண்டுத்தாக்குதலினை மேற்கொண்டன.
இக் குண்டுத் தாக்குதலில் 52 மாணவிகள் மற்றும் இரு பணியாளர்கள் உட்பட 54பேர் உயிரிழந்தனர். 130 மாணவிகள் படுகாயமடைந்ததுடன் பல மாணவிகள் சிறு காயங்களுக்குமுள்ளாகினர். படுகாயமடைந்தவர்களில் மூன்று மாணவியர்களுக்கு கால்கள் துண்டிக்கப்பட்டதுடன் மாணவி ஒருவர் கண் ஒன்றை இழந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவர்களில் மேலும் காயப்பட்ட மூன்று மாணவிகள் முல்லைத்தீவு வைத்தியசாலையினால் கண்டி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். சிறீலங்கா பயங்கரவாத விசாரணைத் திணைக்களம் உடனடியாக காயப்பட்ட மூன்று மாணவிகளையும் கைதுக்குள்ளாக்கினர்.
இறுதியாக மூன்று மாணவிகளும் விடுவிக்கப்பட்டு வன்னியிலுள்ள தமது வீட்டுக்குச்செல்ல விடுவதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களுள் காயமடைந்த ஒரு மாணவி வவுனியாவில் இறந்துவிட்டார். மற்றைய இரு மாணவிகளும் உடனடியாக கண்டி வைத்தியசாலைக்கு திரும்ப எடுத்துச் செல்லப்பட்டனர். சில மாதங்களின்பின் இரு மாணவிகளும் எங்கே தங்குகின்றார்கள் என்பதே மர்மமாக மாறியது அவர்களது பெற்றோர்கள் மட்டும் ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் அவர்களைச் சந்திப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஏறத்தாழ இரு வருடங்களாக எதுவித குற்றச்சாட்டுக்களுமின்றி இந்த இரு மாணவிகளது தடுத்துவைத்தலானது அவர்களது பெற்றோருக்கு விளங்கிக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது.
இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டோர் விபரம் (பெயர் வயது)
![]()