
இடிவிழுத்திப் போகும் இச்செய்தி வருமென்றா உன்னை வழியனுப்பி வைத்தோம் !
போர் ஓய்ந்த நாளிலும் எமக்கேன் இடி விழுகின்றது?
குருதி நரம்புகள் உறைந்துபோக நெஞ்சில் குத்தீட்டி ஏறுகின்றது.
கேணல் ராயு, குயிலனெவும் இவன் குறிக்கப்பட்டான். அதிகம் பேசாமல் அதிகம் சிரியாமல் அதிக அதிசயம் நிகழ்த்திய அதிசயன்.
தலைவனருகில் தன்னை தயார்படுத்தியதால் கதிரவன் ஒளிகசிந்து ஊறியகாளை நுட்ப மதி நிறைந்த நுாதனன்.
விடுதலையன்றி வேறொன்று சிந்தியா விவேகன்.
புதிய அரும்புகள் முளைகொள்ள நாற்றங்கால் போட்ட நாயகன்.
பெரு வெற்றிகள் ஒவ்வொன்றின் பின்னாலும் இந்த புலி மகனின் பேராற்றலும் இருந்தது.
பகை நெஞ்சேறிய குண்டுகள் ஒவ்வொன்றையும் இவன் கைகள் தொட்டு நீவின.
எல்லாவைற்றையும் தூக்கிவைத்துவிட்டு இத்தனை அவசரமாய் சாவு அள்ளிப் போனதை தாங்கமுடியவில்லையே ராயு.
ஒரு களத்தில் நீ மடிந்திருக்கலாம் நோய் தின்று போனது தான் தாளமுடியவில்லை
அண்ணனைக் கூட மீண்டு தரிசிக்காமல் அகல் விளக்கே அணைந்து விட்டாயே
நீ வளர்த்த பயிர்களைக் கொண்டே நின் கனவை நனவாக்குவோம்! சோகம் கப்பிய முகத்தை துடைத்து விட்டு உன் கனவை நனவாக்குவோம்
அது ஒன்றே உனக்கு காணிக்கை என்றாலும் உன் பிரிவெனும் கொடுமை நீண்ட நாளிருக்கும் எம் நெஞ்சில்.
– புதுவை இரத்தினதுரை
