×

அதிகாரம் 31 –  வெகுளாமை

குறட் பாக்கள்

குறள் #301

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.

பொருள்
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?.

குறள் #302

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற.

பொருள்
வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.

குறள் #303

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.

பொருள்
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.

குறள் #304

நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற.

பொருள்
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.

குறள் #305

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

பொருள்
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.

குறள் #306

சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

பொருள்
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும்

தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.

குறள் #307

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

பொருள்
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.

குறள் #308

இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

பொருள்
தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.

குறள் #309

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்.

பொருள்
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.

குறள் #310

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

பொருள்
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

வெகுளி 

சினம் (கோபம்)

ஏமம் 

பாதுகாவல்

புணை 

தெப்பம்

இணர் 

பல சுடர்களையுடைய

தோய்வன்ன 

தழுவினாற் போன்ற

புணரின் 

கூடுமாயின்

உள்ளான் 

நினையான்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments