×

அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை

குறட் பாக்கள்

குறள் #561

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் 
ஒத்தாங் கொறுப்பது வேந்து.

பொருள்
நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.

குறள் #562

கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம் 
நீங்காமை வேண்டு பவர்.

பொருள்
குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

குறள் #563

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் 
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

பொருள்
குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.

குறள் #564

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் 
உறைகடுகி ஒல்லைக் கெடும்.

பொருள்
கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால்

கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.

குறள் #565

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் 
பேஎய்கண் டன்ன துடைத்து.

பொருள்
யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.

குறள் #566

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் 
நீடின்றி ஆங்கே கெடும்.

பொருள்
கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.

குறள் #567

கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன் 
அடுமுரண் தேய்க்கும் அரம்.

பொருள்
கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.

குறள் #568

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் 
சீறிற் சிறுகுந் திரு.

பொருள்
கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.

குறள் #569

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் 
வெருவந்து வெய்து கெடும்.

பொருள்
முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.

குறள் #570

 கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல 
தில்லை நிலக்குப் பொறை.

பொருள்
கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும் அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.

திருக்குறள் அருஞ்சொற்கள்

வருவந்த 

அஞ்சத்தக்க

ஒருவந்தம் 

உறுதியாக

செவ்வி 

காலம்

செரு 

பகை

சிறை 

காவல்

பொறை 

சுமை

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments