×

அதிகாரம் 62 – ஆள்வினை/ உடைமை

குறட் பாக்கள்

குறள் #611

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் 
பெருமை முயற்சி தரும்.

பொருள்
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

குறள் #612

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை 
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு.

பொருள்
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.

குறள் #613

தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே 
வேளாண்மை என்னுஞ் செருக்கு.

பொருள்
பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.

குறள் #614

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை 
வாளாண்மை போலக் கெடும்.

பொருள்
ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.

குறள் #615

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் 
துன்பம் துடைத்தூன்றும் தூண்.

பொருள்
தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.

குறள் #616

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 
இன்மை புகுத்தி விடும்.

பொருள்
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.

குறள் #617

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் 
தாளுளாள் தாமரையி னாள்.

பொருள்
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.

குறள் #618

பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் 
தாள்வினை இன்மை பழி.

பொருள்
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.

குறள் #619

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும்.

பொருள்
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.

குறள் #620

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் 
தாழா துஞற்று பவர்.

பொருள்
“ஊழ்” என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

அசாவாமை 

அசராமல்

ஓம்பல் 

ஒழித்தல்

தாள் 

முயற்சி

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments