×

செட்டிக்குளம் படுகொலை – 02.12.1984

வவுனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமமாக வவுனியா-மன்னார் வீதியில் வவுனியா நகரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில்  செட்டிக்குளம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் விவசாயிகள், வர்த்தகர்கள், கூலித்தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் வாழ்கின்றார்கள்.

1984.12.02 அன்று இராணுவத்தினரால் செட்டிகுளப் பகுதி எங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இராணுவத்தினர் செட்டிக்குளம் கிராமத்தினை காலை 5.30 மணியளவில் சுற்றிவளைக்கத் தொடங்கினார்கள். கிராம மக்களில் கூடுதலானவர்கள் உறக்கத்தில் இருந்தனர். செட்டிகுள கிராமத்திற்குள் நுழைந்த இராணுவத்தினர் கிராம மக்களில் ஆண்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். இவர்களில் ஐம்பத்திரண்டு பேரைச் செட்டிகுளச் சந்தியில் வைத்து இராணுவ வாகனங்களில் ஏற்றி மதவாச்சிக்குக் கொண்டு சென்றனர்.

இதன்பின் இவர்கள் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. ஆனாலும் இவர்கள் மதவாச்சியிலுள்ள ஓர் சிங்களக் கிராமத்தில் வைத்து இராணுவத்தினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனரென்றும் குற்றுயிராக இருந்தவர்கள் மீது டோசரை ஏற்றிக் கொன்றனரென்றும் செட்டக்குள மக்கள் கூறுகின்றனர்.

செட்டிக்குளம் மகா வித்தியாலய ஆசிரியரான தி.யேசுதாசன் சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில்…

“ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து விட்டு வந்த இராணுவத்தினர் சுற்றிவளைத்து ஐம்பத்திரண்டு ஆண்களைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தில் எனது தம்பியும் எனது அக்காவின் கணவரும் உயிரிழந்தனர். அத்துடன் எனது வீட்டில் வேலை செய்த இருவரும் கைது செய்யப்பட்டனர், சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்பின்பு அவ்வூர் மக்கள் வன்னி, மடு, இந்தியா போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.”

02.12.1984 அன்று செட்டிக்குளப் படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் விபரம்:

  1. சூசைப்பிள்ளை கிறிஸ்துராசா (வயது 32 – கமம்)
  2. இராசையா.
  3. இராமசாமி பொன்னுத்துரை (வயது 45 – கமம்)
  4. ஊர்கனசாமி (வயது 23 – கமம்)
  5. கந்தையா
  6. கந்தையா கெங்காரட்ணம்
  7. குமார் மோகன்
  8. குமார் வரதராசா (வயது 19 – வியாபாரம்)
  9. குருகுலசாமி (வயது 23 – கமம்)
  10. குலசேகரம்பிள்ளை யூஜின் (வயது 18 – கமம்)
  11. பாண்டியன் பெரியரசு
  12. பி.அருள்பிரகாசம் (வயது 30 – கமம்)
  13. பிலிப்பையா அருள்பிரகாசம் (வயது 38 – கமம்)
  14. பரமலிங்கம் பரமநாதன்
  15. ஐயம்பிள்ளை பரமநாதன் (வயது 33 – விவசாயம்)
  16. துரையப்பா நாதன்
  17. முத்துசாமி கோணார் கோபால்
  18. முருகேசு சங்கரப்பிள்ளை (வயது 38 – தொழிலாளி)
  19. அப்பாப்பிள்ளை வெற்றிவேற்பிள்ளை (கமம்)
  20. அல்பின் றொபின்சன் (வயது 26 – கமம்)
  21. அல்வின் அந்தோனிஸ்ரி வின்சன (வயது 24 – தச்சுத் தொழில்)
  22. அல்வின் அலைக்சாண்டர் (வயது 21 – தச்சுத் தொழில்)
  23. அல்வின் அன்ரன்
  24. பொன்னுத்துரை கிறிஸ்துராசா
  25. பொன்னுத்துரை தனநாயகம்
  26. டொண்பொஸ்கோ றொமன்
  27. சௌந்தரராசன் புஸ்பராசன் (வயது 27 – மரவேலை)
  28. செல்லையா யூட்
  29. செல்லையா கேதீஸ்வரன் (வயது 28 – கமம்)
  30. செல்லர் மூர்த்தி
  31. செல்லர் மகேந்திரன்
  32. வேதநாயகம் செபமாலை(வயது 31 – கமம்)
  33. வேலுப்பிள்ளை சிவபாலசிங்கம் (வயது 35 – விவசாயம்)
  34. சந்தணப்பிள்ளை இருதையராசா (வயது 25 – கமம்)
  35. சின்னக்குட்டி கந்தசாமி
  36. சிவகணேசன்
  37. சங்கரப்பிள்ளை பாலேந்திரன் (வயது 29 – கமம்)
  38. வடிவேல் அசோக்குமார்
  39. விநாயகமூர்த்தி யோகநாதன் (வயது 24 – கமம்)

குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

குமுழமுனைப் படுகொலை – 02.12.1984

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்றுப்    பிரதேசசெயலர் பிரிவில் குமுழமுனைக் கிராமம் அமைந்துள்ளது.  இக்கிராம மக்களின் பிரதான தொழிலாக விவசாயம், கால்நடை வளர்ப்பு என்பன அமைந்துள்ளன.

1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் குமுழமுனைக் கிராமம் அதிகாலையில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்படுவதும், மக்கள் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்படுவதும் வழக்கமாக இருந்தது.

வழமைபோல 01.10.1984 அனறு; அதிகாலை சுற்றி வளைக்கப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து 29.11.1984 அன்றும் பலர் கைது செய்யப்பட்டனர். இதில முன்பு கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஏனைய நான்கு சகோதரர்களும், மோகன் என்பவரும் (குமுழமுனையைச் சேர்ந்தவர்) தவிர்ந்த ஏனையோரை இராணுவத்தினர் விடுதலை செய்தனர்.

இவர்களின் மனைவியர் தமது கணவன்மாரை விடுதலை செய்யுமாறு இராணுவத்தினரைக் கேட்ட பொழுதெல்லாம் அவர்களை விசாரணை செய்தபின் விடுதலை செய்வதாகக் கூறிய இராணுவத்தினர் அவர்களை 02.12.1984 அன்று தாம் சுட்டுவிட்டதாக உரியவர்களின் வீடுகளுக்கு 14.02.1985 அன்று அறிவித்தனர்.

இச்சம்பவத்தில் குமுழமுனையைச் சேர்ந்த பொன்னம்பலம் என்பவரின் பிள்ளைகள் 6 பேர் உட்பட அதே கிராமத்தைச் சேர்நத் ஒருவர் அடங்கலாக 07 பேர் உயிரிழந்தனர். அக்கிரமத்தைச் சேர்ந்த 06 குடும்பங்களில் குடும்பத்த தலைவர்கள் இல்லாமல், 06 பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். இச் சம்பவம் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை தொடர்ந்து முல்லைத்தீவில் நடைபெற்ற முதலாவது சம்பவம் ஆகும்.

02.12.1984 அன்று குமுழமுனைப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்.

  1. பொன்னம்பலம் நமசிவாயம் (வயது 51)
  2. பொன்னம்பலம் ஆனந்தன் (வயது 53)
  3. பொன்னம்பலம் கெங்காதரன் (வயது 45)
  4. பொன்னம்பலம் பொன்ராசா (வயது 43)
  5. பொன்னம்பலம் சந்திரலிங்கம் (வயது 49)
  6. பொன்னம்பலம் விவேகானந்தம் (வயது 47)
  7. மோகனதாஸ் (வயது 32)

குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments