
உலக பெண்கள் தினம் மாச் 8
உலக பெண்கள் தினம் மாச் 8 வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி பேரணி நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி. இந்த நாளினை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற ஆலோசனை கோபனேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.
இதுவே பின்னர் சர்வதேச பெண்கள் தினமாக உருவானது. உழைக்கும் பெண்கள் முன்வைத்த இந்த தினம் இன்றளவிலும் படித்த, அலுவலக சூழல், தொழிற்சாலையில் பணிபுரியும் மகளிர் போன்றவர்களின் பார்வையிலேயே நகர்ந்து வருகிறது. ஆனால் சுமை தாங்கிகளாக எத்தனையோ பெண்கள் இந்த வட்டத்திற்கு வெளியே இன்னமும் வெளிச்சமின்றி வாழ்ந்து வருகிறார்கள். உழைப்பு, பொருளாதார சுரண்டல் இவற்றையும் தாண்டி தனிமையில் போராடும் பெண்கள் பலர். தனிமையில் குழந்தைகளை வளர்த்து கரை சேர்ப்பதற்காகவே வாழ்க்கையைத் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் இந்த சமூகத்தில் உள்ளனர்.
ஆண்களுடன் சரிநிகர் உரிமை வேண்டி போராடும் பெண்கள் ஒருபுறம் என்றால் ஆண்கள் குடும்பத்தைக் கவனிக்காததால், குடும்பப் பணிகளைப் பகிர்ந்து கொள்ளாததால், குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை எதிர்கொள்ளாததால் அதனை பூர்த்தி செய்வதற்காக தியாகிகளாகவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து மடியும் பெண்கள் ஏராளம். குறிப்பாக கிராமப்புற, அடித்தட்டு நிலையில் வாழும் பெண்கள் இந்தப் பிரச்சினையை அதிகமாக எதிர்கொள்கின்றனர். திருமணத்திற்கு முன்பு தந்தையாலும், பின்பு கணவனாலும் பெண்கள் சுமைதாங்கியாக மாறிய அவலம் இன்னமும் தொடர்கிறது. உழைக்கும் பெண்கள் மட்டுமல்லாமல் எந்த வேலைக்கும் செல்லாமல் குடும்பத்தை மட்டும் கவனிக்கும் பெண்களும் இதனைத் தினந்தோறும் கடந்தே செல்கின்றனர். எனவே பெண்களுக்கான உரிமை, விடுதலை, மரியாதை என்பது குடும்பத்தில் இருந்தும் தொடங்க வேண்டும். உணவு சமைப்பது, குழந்தை வளர்ப்பது உட்பட குடும்ப பொறுப்புகளை சரியான முறையில் ஆண்களும் கவனித்தால் மட்டுமே இது சாத்தியம். அதனை நோக்கி நகர்வதே முழுமையான பெண் உரிமையாக முடியும்.
பெண் என்பவள் இந்த தேசத்தை கட்டியமைக்கும் வலிமை கொண்டவள். ஒரு குடும்பத்தை முன்னேற்றவும், குழந்தைகளின் எதிர்காலத்தை சரியான தொலைநோக்கோடு கொண்டு செல்லவும் பெண்களின் பங்கு என்பது அளப்பரியது. ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிப்பாள் என்று சொல்வார்கள். உண்மைதான். பெண்ணின் வைராக்கியம் என்பது ஆணை விட வலியது. உடல் ரீதியான உறுதியில் ஆண் வலியவன் என்றால், மன ரீதியான உறுதியில் பெண் வலியவள்.
இந்த தேசத்தை கட்டியமைக்கப் போராடிய பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பின்னால் ஒரு பெண்ணின் மன உறுதி இருக்கிறது என்றால் அது மிகையல்ல. தற்கால சூழலில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் பெண் மனரீதியான வலிமையை அதிகமாக உறுதி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட மன உறுதிக்கும், வீரத்திற்கும் சான்றாக சுதந்திர போராட்ட வேங்கை பெண்மணி வேலுநாச்சியாரை கூறலாம்.
தொடர்ந்து தாயகத்தில் தனி பெண்களாக பல மனச்சுமைகளுடனும் உடற் சுமைகளுடனும் இன்னல்களுக்கு மத்தியில் ஆளுமையுடனும் நற்பண்புகளுடனும் வாழும் எம் பெண்கள் மதிப்புக்குரியவர்களே. யுத்த வடுக்களுடனும் இன்றும் எமது பெண்கள் மனச்சுமைகள் இருந்த போதிலும் தமது குடும்பத்தை மேல் நிலைக்கு கொண்டு செல்வதற்கு அயராது பல வழிகளிலும் வாழ்வாதாரங்கள் செயல்படுத்தி தியாகிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் வழித்தோன்றலில் வந்தவர்கள் இன்று என் வயதை ஒத்தவர்கள் வைத்தியர், விமானி, தொழில்நுட்பம் என பல துறைகளிலும் மேல் நோக்கி உயர்கின்றனர். பல திறமைகளை தன்னகத்தே வைத்திருக்கும் பெண்கள் தத்தமது திறமைகளை வெளிக்கொண்டு வருவதன் மூலம் இ௫பாலரின் புரிந்துணர்வுடனும் ஆத்மாத்தமாக வாழ இவ்வுலகில் வலுச் சேர்ப்போமாக.
நன்றி மாவீரர் மேஜர் பண்டிரவன்னியன்(சுதன்)
தமிழ்நிலா