×

கரும்புலி மேஜர் சிற்றம்பலம்

என்றைக்குமே வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த முகாம் இன்றும் அதுபோலே இயங்கிக் கொண்டிருந்தது. தலைநகரில் தங்கள் உயிர்களைக் கொடுத்துச் செய்து முடிக்கப் போகும் அந்தத் தாக்குதலுக்காய் அவர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் முன் எழுந்திருந்த எண்ணங்களெல்லாம் சிற்றம்பல பற்றியதாகத் தானிருந்தது. இந்தத் தாக்குதலை சிற்றம்பலம் என்னென்று செய்து முடிக்கப்போகிறான்? இந்த நீண்ட நடைப் பயணத்தை இவன் எப்படி நடந்து கடக்கப் போகின்றான்? ஏற்கனவே விழுப்புண்பட்டு சிறு எலும்புத்துண்டு அகற்றப்பட்ட காலொன்று அதற்கு மேலாய் அவனைச் சுமக்கக்கூடிய பாரம் கொண்ட பொதி அவன் சுமப்பதற்காய்க் காத்திருக்கிறது. இத்தனையும் சுமந்து கொண்டு இவனால் இதைச் செய்து விட முடியுமா? என்ற வினாக்கள் அங்கிருந்த போராளிகளின் மனதைக் குடைந்து கொண்டிருந்தது

ஆனால் இந்தத் தாக்குதலுக்காய் தூக்கம் தொலைந்து போய்ப் பல இரவுகளைச் சுமந்திருந்த சிற்றம்பலம் உற்சாகமாய் இறுதி நேர அலுவல்களில் மூழ்கியிருந்தான். அவன் சுமந்தது இரவுகளை மட்டுமல்ல அவனது வாழ்க்கையே சுமைகள் நிறைந்தது தான்.

சின்ன வயதிலேயே தந்தையின் உழைப்பு முடங்கிப் போக குடும்பத்தின் சுமையைத் தானே அவன் தான் சிற்றம்பலம், தாங்க வேண்டியதாயிற்று. அவனது எதிர்கால வாழ்க்கைக்காக பள்ளி செல்லுகின்ற வயது அப்போது. அந்த வயதில் அதை விட்டுவிட்டால் அவனது எதிர்காலம்? அதனால் தான் அவள் அதைச் சொல்ல வேண்டி வந்தது. ‘தம்பி நீ வேலைக்குப் போக வேண்டாமடா, பள்ளிக்குடத்துக்கு போ நான் ஏதும் சின்ன வேலையென்டாலும் செய்து சாப்பாடு போடுறன்’ அம்மா சொல்லி முடித்து அவனைப் பார்ப்பதற்குள் அவன் போய் விடுவான்.

காலையில் மாமாவின் ‘சயிக்கிள்’ கடையில் நிற்கும் அவன் அவசர அவசரமாய்ப் பள்ளிக்கூடம் போய், பின் மீண்டும் சயிக்கிள் கடையில், தோட்டத்தில் என்றவாறாய் நிற்காமல் சற்றும் பூமிபோல் சுழன்றுகொண்டிருந்தான். அவன் அப்படியிருந்தும் அவனது முயற்சிக்கு மேலால் வந்து நிற்கும், குடும்பத்தின் செலவீனங்கள்.

இனி அந்த முடிவைத் தவிரவேறு தெரிவுகள் அவனுக்கில்லை. நிகழ்கால வாழ்க்கைக்காய் அவனது எதிர்கால வாழ்க்கையை இழக்க வேண்டிய நிர்ப்பந்தம். தாஸன் அப்பொழுது மாணவனல்ல் பள்ளிப் பருவத்தில் குடும்பச் சுமை தாங்கிய உழைப்பாளி.

எரிபொருளில் இயங்கும் வாகனம் போல அவனது உழைப்பில் இயங்கிக்கொண்டிருந்தது அந்தக் குடும்பம். தாஸன் வியர்வையையும் தாயின் கண்ணீரையுமே தாம் உண்ணுவதாய் எண்ணியது அவனது உறவுகள்.

அத்தனை கடினங்களையும் அவன் தாங்கியது அவனது ஒரேயொரு அக்காவிற்காகவும் தம்பிமார்களுக்காகவும் தான். காலையிலிருந்து மாலை முடியும் வரை அங்கொரு வேலை இங்கொரு வேலையென ஓடி ஓடி உழைத்து, இளைக்க இளைக்க கையில் காசுடன் வந்து நிற்தும் அவனது களைப்பு, தன் உறவுகளோடு சேர்ந்து உணவு உண்ணும் போது மறைந்து போகும். இந்த மன ஆறுதலுடன் தான் அவனது இரவுத் தூக்கம் கழியும்.

அன்றும் அக்காவுடன் கடைக்குச் சென்று விட்டு திரும்புகையில் புடவைக் கடை ஒன்றின் முன் அக்கா நின்று விட்டாள். அவளுக்குப் பிடித்த சட்டையொன்றைக் கண்வெட்டாமல் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். தாஸன், தன் அருகில் வந்தவளின் காலடி ஓசையைக் காணாது திரும்பிய போது கடைக்காரன் சட்டையின் விலையைச் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் அவனது உழைப்பிற்கு அது பொருத்தமானதல்ல நிறைவேற்ற முடியாத அக்காவின் ஆசையை எண்ணி அவனது உள்ளம் ஏங்கியது. ஒரு மலையின் உச்சியிலிருந்து கண்ணுக்குத் தெரியாத அருவி ஒன்று கசிவது போல அவனது விழிகள் மெல்லக் கசிய, அதைக் கண்டோ என்னவோ அவள் சட்டையைப் பார்க்காதவள் போல தொடர்ந்தும் நடந்தாள்.

தாஸன் தன் அக்கா மீது அளவற்ற பாசம் வைத்திருந்தாலும் அவனது மனம் யாருக்காகவும் இளகும். சிங்கள இராணுவத்தின் கண்ணிவெடியில் சிக்கி காலொன்றை இழந்த பின் அவள் அணிந்திருந்தது செயற்கைக்கால். தாஸனின் சொந்தங்களுக்குள் அவளும் அடங்குகிறாள். அவன் கண்களுக்கு அவள் தென்படும் போதெல்லாம் அவள் அணிந்திருந்த செயற்கைக்கால்ப் பாதம் அவளிற்குப் பொருத்தமற்றிருப்பதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நல்ல பாதம் அணிய வேண்டும் என்ற அவளின் ஆசையை உணர்ந்து கொண்டு அதற்காகப் பணம் சேர்க்க, அதிகாலையயிலெழுந்து யாழ்ப்பாணத்திலிருந்து வடமராட்சி வரை துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து தினசரிப் பத்திரிகை கொடுத்து உழைத்த அவனின் மனதின் மென்மையை அவனுடன் நெருங்கிப் பழகியோருக்குத் தெரியும்.

இவ்வாறு, தான் குடும்பத்தின் மீதும் உறவுகள் மீதும் வைத்திருந்த பாசத்தைப் பயிற்சிப் பாசறையில் தன் தோழர்களுக்குச் சொல்லி விட்டு மௌனமாகவிருந்தான். ‘மச்சான் குடும்பம், சொந்தமெண்டு உருகிவழியிறாய், பேந்தேன் வீட்டை விட்டிட்டு இயக்கத்துக்கு வந்தனி பேசாம அங்கையே இருந்திருக்கலாம் தானே?’ அந்த வினாவின் பின் நிலவிய மௌனத்தைக் கலைத்து விட்டு அவன் உறுதியாய்ச் சொன்ன வார்த்தைகளில் எவ்வளவு அர்த்தங்கள் பொதிந்திருந்தன.

‘மச்சான் நான் அக்காவிலையும் எங்கட வீட்டுக்காறரிலையும், எல்லாரிலையும் பாசமாய்த் தானிருந்தனான் இப்பவும் அதைவிட மேலாப் பாசம் வச்சிருக்கிறன். ஆனா ஒண்டு சொல்லுறன் வெள்ளம் வருதெண்டா அணை கட்ட வேணுமெண்டு எல்லாருக்கும் தெரியும். அணையை வெள்ளம் வாற இடத்தில் தான் கட்ட வேணும். வீட்டைச் சுத்திக் கட்டக் கூடாது. எங்கடையாக்கள் இப்பவும் வீட்டைச் சுத்தித்தான் அணைகட்டிக்கொண்டிருக்கினம்.’

அந்த வார்த்தைகளின் கனதியின் பின் தோழர்களால் பேச முடியவில்லை. அவனது அர்த்தம் பொதிந்த வார்த்தைகளைப் புரிந்து கொண்டதால் அவர்கள் மௌனித்துப் போனார்கள். அவனது உள்ளத்து உறுதியும் வார்த்தைகளின் தெளிவும் அவர்களை அதிசயிக்க வைத்தது.

ஆனாலும் மற்றவர்கள் வாழ்க்கைக்காக ஏங்கும் போது தன்னை இழந்து வருந்தி அவர்களின் மகிழ்வில் மனநிறைவடையும் அவனது இயல்பு இன்னமும் மாறாதிருந்தது.

பயிற்சிப் போராளிகளுக்குத் தாயாக தந்தையாக சிற்றம்பலம் இயங்கிக் கொண்டிருந்தான். பகல் முழுவதும் பெற்ற கடின பயிற்சியின் விளைவாய் போராளிகள் உறக்கத்திற்குச் சென்று விடுவார்கள். சிற்றம்பலத்தின் படுக்கை வெறுமையாய் இருக்கும். காய்ச்சலினால் நடுங்கிக் கொண்டிருக்கும் போராளிகளைத் தன் மடியில் வைத்து உணவூட்டிக் கொண்டிருப்பான் சிற்றம்பலம். அவர்கள் தூங்காவிட்டால் சிற்றம்பலத்தின் படுக்கை அன்று வெறுமையுடனே கழியும்.

இப்படி அவன் எத்தனை மென்மையாயினும், அவனது இலட்சிய உறுதி உருக்குப் போன்று கடினமானதாகவேயிருந்தது.

சேந்தாங்குளப்பகுதியில் சிங்கள இராணுவத்தின் சுழல்காற்று இராணுவ நடவடிக்கைக்கு எதிராய் விடுதலைப்புலிகள் சுழன்று சழன்று பதிலடித்தாக்குதல் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஒருவனாய் சிற்றம்பலமும் சண்டையிட்டுக் கொண்டிருக்க, துப்பாக்கி ரவையொன்று அவனது காலைத் துளைத்துச் சென்றது. அவனது காலிலிருந்து வழிந்த குருதியுடன் எலும்பின் சிதைந்த துகள்களும் கலந்திருந்தன.

சிற்றம்பலத்தால் இனிச் சண்டை செய்ய முடியாது; அவனால் இனி பயிற்சிகள் செய்ய முடியாது; என்று தானே எல்லோரும் எண்ணினார்கள். ஆனால் ஒன்றுக்கொன்று சமனில்லாது நிற்கும் அந்தக் கால்களாலேயே தன்னால் இயன்றதைச் செய்து முடித்துவிட வேண்டுமென்று அவன் முயற்சித்துக் கொண்டிருந்தான். காயமடைந்த காலிற்கு மட்டை கட்டிய நிலையில் மருத்துவ விடுதியில் சிற்றம்பலம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, காயம் மாறிய போராளிகளைக் கூட்டிச் செல்ல வாகனம் வந்திருந்தது. காயம் மாறிய போராளிகள் உற்சாகத்துடன் செல்ல அவர்களை வழியனுப்பிய மருத்துவ விடுதிப் பொறுப்பாளர், சிற்றம்பலத்திற்கு ஆறுதல் கூற வந்த போது அவனைக் காணவில்லை. முகாமின் சகல இடத்திலும் தேடுதல் நடத்தியாகிவிட்டது. சிற்றம்பலம் எங்கே போயிருப்பான் என்பதை இப்பொழுது அவரால் விளங்கிக் கொள்ள முடிந்தது. பட்டை கட்டி ஆறாதிருக்கும் காயத்துடன் அவன் சமர்முனைக்குப் புறப்பட்டுவிட்டான். பின்னர் அவனைத் தேடிப்பிடித்து  சண்டைக்குப் போகாமல் மறிக்க அவனுடன் பெரும் போராட்டமொன்றே நடத்த வேண்டியதாயிற்று.

அவனது இலட்சியப் பற்றும் தேசத்தின் மீது கொண்ட உறுதியையும் அவனது செயல்கள் சொல்லி நின்றன. அந்த உறுதியுடன் தான் அவன் கரும்புலிகள் அணியில் இணைந்து கொண்டான்.

சாதாரண மனிதன் கூட கடினப்பட்டு எடுக்கும் அந்தப் பயிற்சியை சிற்றம்பலம் தன் உடல் வலிமையாலல்ல, மனவலிமையால் தான் எடுத்தான். அவனது அந்த முயற்சியின் இறுதியில், அவனது மூன்று வருட கடின உழைப்பின் விளைவைக் காட்ட அவனன்று உற்சாகமாய் இயங்கிக் கொண்டிருந்தான்.

ஆனால் எல்லோர் முகத்திலும் கவலைக் குறிகள்; கண்ணீர்க் கோடுகள்; அந்த இரவுப்பொழுதின் மௌனத்திலும் யாருக்கும் கேட்காத சின்னச் சின்ன முனகல்கள் எல்லாமே சிற்றம்பலம் பிரிந்துவிடப் போகிறான் என்பதனால் தான். என்றைக்குமே மற்றவர்களுக்காக வாழப் பழகிப் போனவன்; இன்றைய கையசைப்பின் பின் நாளைய வரலாறாகப் போகும் அவனை எண்ணி அவர்கள் விக்கித்துப் போய் நிற்க, அவனோ தோளில் பாரச் சுமையைத் தாங்க, மெல்லக் குனிந்து தோளில் கொழுவி இடுப்புப் பட்டியைக் கட்டினான். அவனது உறுதி போலவே அந்தச் சுமையும் உறுதியாக அவனைப் பற்றிக் கொண்டது.

பறவைகளின் ராகங்களும், பூச்சிகளின் ரீங்காரமும், விலங்குகளின் இடைவிட்ட உறுமலும் காட்டுக்குள் கேட்டுக் கொண்டிருந்த பொழுதில் அந்தப் போராளிகளின் தழுவல்களின் பின்னால் கையசைப்புடன் பயணத்தைத் தொடர்ந்தார்கள.; சிற்றம்பலம் தன் இயலாத காலால் இழுத்திழுத்து நடந்து கொண்டிருந்தான். அவன் நடந்து கொண்டிருந்தது அவனது கால்களால் அல்ல, மனவலிமையால் தான். ஏனென்றால் அவன் கடக்கப்போவது நான்கைந்து கி.மீ தூரமல்ல. நூற்றிப்பத்து கி.மீ. களையும் தாண்டிய தூரம்.

உடலை உட்புகுத்த முடியாத இறுசல் கற்றைகளுக்குள்ளால் தோளில் தாங்கிய அந்தப்பாரச் சுமையுடன் கைகளாலும் கால்களாலும் நடந்து கொண்டிருந்தார்கள். நான்கைந்து நாள் தொடர்ச்சியான பயணம். ஓய்வென்பது உணவுண்ணும் போது மட்டும்தான் நித்திரையைக் கண்டு நீண்ட நேரமானதால் கண்கள் சிவந்து போக அந்த சுட்டெரிக்கும் வெயிலுக்குள்ளால் நடந்து கொண்டிருந்தார்கள். வியர்வை ஆடையில் தங்க இடமில்லாமல் ஆடையிலிருந்து வழிந்து கொண்டிருந்தது.

இத்தனை துயரங்களுக்குள்ளாலும் தன் தோழர்களுடன் நடந்து கொண்டிருந்த சிற்றம்பலம் இடையில் பாரத்தின் சுமையும் உடலின் வேதனையும் தாக்க அவனது கரங்கள் நிலத்தைத் தொட்டுவிட்டன. அவன் எழ முயற்சித்துக் கொண்டிருந்தான். ஆனால் அது அவனால் முடியவில்லை. ‘கையை குடுங்கோடா மச்சான் என்னால எழும்பேலாமக் கிடக்கு’ என்றவன் தோழர்களின் உதவியுடன் மெல்ல எழுந்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான். உடலால் வழிந்த வியர்வையும் கண்களால் வழிந்த நீரும் அவன் போகும் வழியின் தடங்களாகக் கிடந்தது.

தாகத்தால் வரண்ட நா தண்ணி கேட்க அவனையறியாமலே அவனது கைகள் இடுப்பிலிருந்த தண்ணீர்க்கானைத் தடவியது ஆனால் தண்ணீர் முடிந்து நீண்ட நேரமாகி விட்டதை அவன் உணர்ந்து கொண்டு மௌனமாக நடந்து கொண்டிருந்தான்.

‘இலக்குக்கு கிட்ட வந்திட்டம் மச்சான்’ அந்தக்குரலினால் காய்ந்து வரண்டு போயிருந்த முகங்களில் இனம் புரியாத புத்துணர்ச்சி. நீண்ட பயணத்தின் முடிவில் கிடைக்கப் போகும் அந்த வெற்றிச் செய்தி.

சீனன்குடா விமானத் தளத்தின் எல்லை எல்லோரும் ஒன்றுகூடி திட்டத்தை மீள் நினைவுபடுத்திக் கொண்டு தாக்குதலுக்காய் நகர்ந்தார்கள்;. ஆரண்களை உடைத்தபடி கரும்புலி வேங்கைகள் ஆவேசத்துடன் உட்புகுந்தார்கள். அவர்கள் ஓடிச்செல்ல முயற்சித்தாலும் உடலின் களைப்பு அவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் கண்களுக்குத் தெரிந்த விமானம் நோக்கி ஓடினார்கள். சிற்றம்பலம் தன் கால்களை மடித்து நிலத்தில் நிலையெடுத்து தோளில் லோவை வைத்து இலக்கைத் தன் ஆயுதத்தின் குறிகாட்டியுடன் இணைத்துக் கொண்டான். அவன் சுடுவதற்குத் தயாரானான். ஆனால் அதற்குள் எதிரியின் துப்பாக்கி ரவை அவன் உடலைத் தாக்க அந்த மண் சிவந்து கொண்டிருந்தது.

அவன் மீண்டும் தன் எஞ்சிய சக்திகளை ஒன்றிணைத்து தன் ஆயுதத்தை இலக்குடன் இணைத்துக் கொண்டான். ஆனால் இப்போதும் அவனைத் துளைத்தன துப்பாக்கிச் சன்னங்கள். ஆனாலும் அவன் விசைவில்லை அழுத்தினான். அவன் கைகள் சோர்ந்தன. உடல் இயக்கமற்றுப் போவதை அவன் உணர்ந்து கொண்டான்.

மெல்லச் சரிந்த அவனை அணைத்துத் தூக்க தோழர்கள் நெருங்கினார்கள். அவன் கைகளால் அவர்களை நெருங்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தான். அவனது மார்பில் இருந்த வெடிமருந்துப் பொதியின் விசைவில்லை அழுத்தினான். அவனது நெஞ்சிலிருந்து சுளிப்பிளப்புடன் கூடிய அதிர்வு அவன் தன் தோழர்களை விட்டுப் பிரிந்து விட்டான்.

‘வெள்ளம் வந்தா அணையை வெள்ளம் வாற இடத்தில தான் கட்டவேணும். வீட்டைச் சுத்திக் கட்டக்கூடாது’ இது அவனது வார்த்தைகளல்ல, வாதங்களல்ல இதுவே அவனது வாழ்க்கை. ஏனெனில் அந்த வருடத்தின் முதல் மாதத்தில் தன் தாயை இழந்து அந்தச் சோகம் மறையும் முன் மாhசியில் தந்தையை இழந்த பின்னும் அடுத்து வந்த 25 நாட்களுக்குள் அவனால் அதைச் செய்ய முடிந்ததென்றால் அவன் உச்சரித்தவை வெறும் வார்த்தைகளோ வாதங்களோ அல்லவே!

கரும்புலி

மேஜர். சிற்றம்பலம் – குமார் – இராஜேந்திரம் சதயகுமார்

சுதுமலை யாழ்ப்பாணம்

பிறப்பு – 1974-07-23

இயக்கத்தில் – 1991-05 23

வீரச்சாவு – 1997-05-03

சகோதரர்கள் – ஒரு அக்காவும், ஒரு அண்ணனும், இரு தம்பிகளும்

பங்கு பற்றிய தாக்குதல்கள்

சுழல்காற்று இராணுவ நடவடிக்கை மீதான எதிர்த் தாக்குதல்

சீனன்குடா விமானத்தளம் மீதான கரும்புலித்தாக்குதல்

நினைவுப்பகிர்வு – புரட்சிமாறன்

விடுதலைப்புலிகள் இதழ்

மார்கழி – தை 2001

கரும்புலி மேஜர் சிற்றம்பலம்

விடுதலைப்புலிகள் குரல். 97

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments