×

அதிகாரம் 70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

குறட் பாக்கள்

குறள் #691

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

பொருள்
முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்.

குறள் #692

மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கந் தரும்.

பொருள்
மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.

குறள் #693

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

பொருள்
தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும் அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல.

குறள் #694

செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.

பொருள்
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து,

அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.

குறள் #695

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்காற் கேட்க மறை.

பொருள்
பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

குறள் #696

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.

பொருள்
ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.

குறள் #697

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

பொருள்
விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.

குறள் #698

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும்.

பொருள்
எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

குறள் #699

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.

பொருள்
ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.

குறள் #700

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் 
கெழுதகைமை கேடு தரும்.

பொருள்
நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

இகல் 

மாறுபடும் இயல்புடைய

மன்னிய 

நிலைப்பெற்ற

போற்றல் 

காத்தல்

கடுத்தபின் 

சந்தேகித்த பின்

தேற்றல் 

தெளிவித்தல்

அவித்து 

நீக்கி

ஆன்ற 

நிறைந்த

ஓரார் 

கேளாமல்

மறை 

ரகசியம்

வேட்பன 

விரும்புவன

எஞ்ஞான்றும் 

எந்த நாளும்

இனையர் 

இளையவர்

இனமுறையர் 

இன்ன முறையினர்

துளக்கற்ற 

அசைவற்ற

கெழுதகைமை 

உரிமை

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments