×

அதிகாரம் 72 – அவை அறிதல்

குறட் பாக்கள்

குறள் #711

அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின் 
தொகையறிந்த தூய்மை யவர்.

பொருள்
ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

குறள் #712

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் 
நடைதெரிந்த நன்மை யவர்.

பொருள்
சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்.

குறள் #713

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் 
வகையறியார் வல்லதூஉம் இல்.

பொருள்
அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது.

குறள் #714

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் 
வான்சுதை வண்ணங் கொளல்.

பொருள்
அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்.

குறள் #715

நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள் 
முந்து கிளவாச் செறிவு.

பொருள்
அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.

குறள் #716

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் 
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

பொருள்
அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

குறள் #717

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் 
சொற்றெரிதல் முன்னர் இழுக்கு.

பொருள்
மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்.

குறள் #718

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் 
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

பொருள்
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.

குறள் #719

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் 
நன்கு செலச்சொல்லு வார்.

பொருள்
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்.

குறள் #720

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர் 
அல்லார்முன் கோட்டி கொளல்.

பொருள்
அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

முந்து 

முற்பட்டு

கிளவா 

சொல்லாத

செறிவு 

அடக்கம்

வியன்புலம் 

விரிந்த நூற்பொருள்

பொச்சாந்தும் 

மறந்தும்

செல 

மனங்கொள்ள

அங்கணம் 

முற்றம்

உக்க 

வீழ்ந்த

கோட்டிக் கொளல் 

சொல்லாதிருத்தல்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments