×

லெப்டினன்ட் சங்கர்

லெப்டினன்ட் சங்கர் ஒரு வேங்கையின் மரணம் சங்கர்,

ஆயுதப்படைகள் வலைவிரித்துத் தேடும் செ.சத்தியநாதன். இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கொரில்லா வீரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன்.

கண் திறக்காத பூனைக்குட்டியாக நெஞ்சில் கனலும் புரட்சிகர உணர்வோடு சின்ன வயதிலேயே இயக்கத்திற்குத் தன்னைத் தானே அர்பணிக்கக் காத்திருந்த வீரமறவன். அரசபடையின் திடீர் முற்றுகையிலிருந்து தப்பிச் செல்லுகையில் சுற்றி நின்று கமாண்டோக்கள் சரமாரியாக வெடிகளைத் தீர்த்த போது காயமுற்று, இயக்கத்தின் முதலாவது களப்பலியாகும் பெருமையை அணைத்துக் கொள்கிறான்.

சங்கர் அச்சம் என்றால் என்னவென்று அறியாத அடலேறு. ஒரு சின்னப்பிசகு என்றாலும் கையோடு வெடித்து ஆளையே முடித்து விடக்கூடிய வெடிகுண்டுகளின் தயாரிப்புக்களிலும் அச்சமில்லாது ஈடுபடுவான். அரச படைகளின் தீவிரக்கண்காணிப்புக்கு அவன் இலக்காகியிருந்தாலும் அச்சம் எதுவுமின்றி அவன் கிராமங்களில், வீதிகளில் சாதாரணமாக உலவி வருவான். அதே நேரத்தில் சுழன்று கொண்டிருக்கும் விழிகள் சுற்றப்புறச் சூழ்நிலைகளை நுணுக்கமாக அவதானித்தபடியே இருக்கும். தான் அறியாது செய்யும் சின்னத் தவறும் கூட ஒரு கொரில்லா வீரன் எள்ற முறையில் தனக்கும் இயக்கத்திற்கும் ஆபத்து ஏற்படுத்தும் என்பதில் சங்கர் எப்போதும் விழிப்பாயிருப்பான். அரச படைகளின் கையில் சிக்க நேருமானால் எதிரிகளில் ஒருவனையாவது வீழ்த்தி விட்டு தானும் சாவது என்பதில் அவன் அசைந்தது கிடையாது. விடுதலைப் போராளிகள் எனப்படுபவர்கள் ஆயுதங்களோடு பிடிபடும் செய்திகளைப் பத்திரிகையில் வாசிக்கையில் குமுறுவான். அமைதியான தன்மையும், அதிகம் பேசாத சுபாவமும் கொண்ட சங்கரின் இந்தக் குமுறலுக்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு, அரச படைகளின் கையில் எதிர்ப்பு எதுவுமில்லாமல் ஒரு விடுதலைப் போராளி சரணடைவது என்பது கோழைத்தனமானது என்பது சங்கரின் உறுதியான முடிவாக இருந்தது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில்; விடுதலைப் போராளிகளை ஆயுதங்களோடு அரசபடைகள் கைது செய்வதை அனுமதிக்கும் போக்கானது அரசபடைகளுக்கு விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விடுவதில் நம்பிக்கையை ஊட்டிஇ அவர்களின் துணிச்சலைக் கூட்டிவிடும் என்று சங்கர் கருதினான்.

படுகாயமுற்ற நிலையிலும் கூட மதில் தாண்டிப் பாய்ந்து, தங்கள் கொரில்லாப்பிரிவின் மற்றொரு மறைவிடத்தை நோக்கித் தப்பிச் சென்றவன் பாதுகாப்பான இடம் வந்து சேர்ந்து விட்டோம் எனத் தெரிந்த பின்தான் இடுப்பிலிருந்து ரிவால் வரை எடுத்துக் கீழே வைக்கிறான். உயிரோடும் ஆயுதத்தோடும் எதிரியின் கைகளில் பிடிபடாத ஒரு வீரனின் சாவு அவனுடையது.

இருபத்தொரு வயதில் அவன் சாதித்தவை தமிழீழப் போராட்ட வரலாற்றுக்குச் சொந்தமானவை. இனிமேல் சாரணர்களை அனுப்பி வடக்கில் புலிப்படையை அடக்கி விட முடியுமென்று பாசிஸ சர்வாதிகாரி ஜே.ஆர். ஜயவர்த்தனா சிறீலங்காத் தலைநகரில் பிரகடனம் செய்த போது, நெல்லியடியில் அரச படைகள் மீது சங்கர் நடத்திய கொரில்லாத் தாக்குதல் தமிழீழம் காணும் வரை தமிழீழப் போராட்டம் ஓயாது, ஒழியாது என்பதை அரசுக்கு எடுத்துக் காட்டியது. ஜீப் சாரதியின் மீது வெற்றிகரமான முதல் தாக்குதலை நடத்தி, ஜீப் வண்டியை நிறுத்த வைத்து, கதவைத் திறந்து சாரதியை ஒரு கையில் வெளியே எடுத்து எறிந்தவாறு, மறு எதிரியை நோக்கிக் குண்டுகளைத் தீர்க்கும் வாலகம் சங்கருக்கே உரியது. இடுப்பிலிருந்து ரிவால்வரை எடுத்த மாத்திரத்தில் குறி வைக்கும் அவனது சாதுரியம் அசலானது. நெல்லியடியில் அரசபடையினர் பீதியுற்ற நிலையில் சங்கர் கால்களை அகல விரித்து, பக்கவாட்டில் நின்று அரசபடையினர் மீது குண்டுமாரி பொழிந்த காட்சி இப்போதும் நம் கண்களில் நிழலாடுகிறது.

சாவகச்சேரி போலீஸ் நிலையத்தின் மீது சீலனின் தலைமையில் நடைபெற்ற கொரில்லாத் தாக்குதலின் வெற்றிக்குச் சங்கரின் பங்கும் கணிசமானதாகும். அரசாங்கத்தால் போலிஸ் நிலையங்கள் உசார்படுத்தப்பட்டிருந்த நிலையில், மாடிக் கட்டிடத்தோடு பிரதான வீதியிலிருந்து சற்றுத் தள்ளி உள்ளே அமைந்திருந்த சாவகச்சேரி போலிஸ் நிலையத்தின் மீது முன்பக்க வாயிலுக்கூடாகத் தாக்குதல் நடத்துவது எனபது விசப் பரீட்சை தான். ஆனால் உயிரைக் கடந்த காலத்திற்கு எழுதி வைத்துவிட்டு, புரட்சி வேள்வியில் குதித்திருக்கும் சங்கர், சீலன் ஆகிய போராளிகளின் முன்னே அபாயங்களும் தடைகளும் என்ன செய்து விட முடியும்? ஜி 3 துப்பாக்கி சகிதம் படுத்துக் கிடந்து சங்கர் சாவகச்சேரி போலிஸ் நிலையத்தின் ஒரு பகுதிக்கு பொறுப்பாக இருந்து நடத்திய தாக்குதல் அப்பகுதி அரசபடைகளை ஸ்தம்பிக்கச் செய்தது.

பொன்னாலைக் குண்டு வெடிப்பு நடவடிக்கையிலும் சங்கர் கடுமையாக உழைத்தவன். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தம்பாப்பிள்ளை மீதான இயக்க நடவடிக்கைக்குச் சங்கரே பொறுப்பு வகிக்கிறான்.

எந்த விதமான வாகனத்தையும் நேர்த்தியாகச் செலுத்தும் ஆற்றலும் சங்கரின் பன்முனைப்பட்ட ஆற்றலுக்குச் சான்றாகும். ஒரு கொரில்லாத் தாக்குதலையடுத்து ஏற்படுகிற பரபரப்பு. எதிரிப்படைகள் ஸ்தலத்திற்கு வருமுன்னர் வெளியேற வேண்டிய பதைப்பு என்பவற்றிற்கும் மத்தியில் மிகுந்த வேகத்துடனும் அதிக நிதானத்துடனும் வாகனத்தை செலுத்துவதில் சங்கர் வல்லவன்.

சக போராளிகளுக்கு ஆயுதங்களைப் பயிற்றுவிக்கும் போது மிகுந்த கவனம் செலுத்துவான். தெளிவாக விளக்குவான். தனக்குத் தெரியாத வி~யங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவன். அன்போடும் பண்போடும் பழகுவதால் சகபோராளிகள் மத்தியில் தனி மதிப்பு சகித்து வந்தான்.

தமிழீழ விடுதலையை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவத் தலைமையிலேயே வென்றெடுக்க முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த சங்கர் இயக்கத்தில் தன்னையே கரைத்துக் கொண்டவன். விடுதலைப் போராட்டமே சங்கரின் முழு மூச்சாக இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கென்றே ஆயுதமேந்திக் களத்திலே குதித்தவன் இந்த வீரன். சமூக விரோத நடவடிக்கைகளையும் சந்தர்ப்பவாதிகளையும் அவன் அறவே வெறுத்தான். அவன் மனசு மிகவும் சுத்தமானது. இத்தகைய இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நின்கிறார்கள்.

தலைவர் பிரபாகரனின் அரசியல் வழிகாட்டலிலும், இராணுவக் கட்டுக் கோப்பிலும் சங்கர் ஊறி வளர்ந்தவன். பிரபாகரனின் அரசியல் தூய்மையில் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான். மலரப்போகும் தமிழீழம் தன்னலமற்ற – தூய்மைமிக்க விடுதலைப் போராளிகளினால் தலைமையேற்று நடத்தப்பட வேண்டும் என்று அவன் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறான். பதவிப் பித்தர்களும் துரோகிகளும் எங்கள் புனித இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்க முனைந்த போதெல்லாம் அமைதியான இந்தப் போர் மறவன் சினங்கொண்டு எழுந்திருக்கிறான்.

சாகும் தறுவாயிற் கூட அவன் தன் உற்றார், பெற்றோரை நினைக்கவில்லை. ‘தம்பி தம்பி’ என்றதான் அந்த வீரனின் உதடுகள் வார்த்தைகளை உதிர்த்தன. தம்பியும், மற்ற இயக்கப் போராளிகளும் கண் கலங்கி நிற்க அந்த வீரமகன் சாவிலே வீழ்ந்து போனான்.

“ஒரு உண்மை மனிதனின் கதை” என்ற ரஷ்ய நாவலைக் கடைசியாக வாசித்துக் கொண்டிருந்த சங்கர் அந்த நாவலை முழுதும் வாசித்து முடிக்கவில்லை. சங்கர் என்ற உண்மை மனிதனின் கதையே ஒரு வீர காவியம் தான்.

நன்றி: விடுதலைப்புலிகள் குரல் 01 (15.03.1984)

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments