
மேஜர் சுரேந்தி ஜேர்மனியில் இறுதி மூச்சு வரை 07.08.1956 – 18.10.1991
தமிழீழ உணர்வை விதைத்து வளர்த்த முன்னோடி மேஜர் சுரேந்தி
தமிழீழ மண் மீட்புக்கான முனைப்புக்களில் மரணத்தைத் தழுவிக் கொண்ட விடுதலைப்புலிகள் வரலாற்றில் மேஜர் சுரேந்திரகுமாரும் நிலைத்து நிற்கின்றார். தமிழீழத் தேசியத் தலைவரால் மேஜர் விருது பெற்று இவருடைய கடந்தகாலத் தியாகங்களும் இடைவிடாத செயற்பாடும் நினைவு கூரப்படுகின்றன.
சுரேந்தி என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட இந்த மாவீரர், நித்திலா என்ற புனைபெயரிற்குள் மறைந்து கொண்டு, வரைந்த விடுதலைக்கவிதைகள் இன்றும் புதிய இளைய சந்ததியை உணர்வூட்டி வழிநடத்திக் கொண்டிருக்கிறது. 1956ம் ஆண்டு ஆவணி மாதம் 7திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள ஈச்சமோட்டை எனும் கிராமத்தில் நமசிவாயம், விஜயலட்சுமி தம்பதியினருக்கு இளைய மகனாக இவர் பிறந்தார்.
இவர் சுண்டுக்குழியில் உள்ள பரியோவான் கல்லூரியில் கல்வி பயின்றார். கலை பண்பாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், இளமைக் காலத்திலேயெ கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதிலும் தொழில் நுட்பத் துறையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இலங்கை வானொலியின், இசையும் கதையும் எனும் நிகழ்ச்சியில் இவரது படைப்புக்கள் ஒலிபரப்பப்பட்டதுண்டு.
அரசியல் அறிவற்ற நாட்தொடக்கம் இவர் சிவகுமாரனின் விடுதலைக் கொள்கையை ஆதரித்துச் செயற்பட்டார். பெற்றோரினதும், உற்றாரினதும் நிர்ப்பந்தத்தின் பேரில் 1978ம் ஆண்டு ஐப்பசி மாதம் தமிழீழத்திலிருந்து வெளியேறி யேர்மனி வந்தபோதும், அரசியல் ரீதியான சிங்கள இனவாத அரசின் ஒடுக்கு முறைகளை எதிர்க்கும் பாங்குடன் செயற்பட்டார். தமிழீழமக்கள் யேர்மனியின் பலபாகங்களிலும் பிரிந்து ஒதுங்கி எதிர்காலச் சிந்தனையின்றி வாழ்வது கண்டு வேதனைப்பட்டார். தமிழ் மக்களின் ஒன்றிணைந்த சேவையை அன்றைய தேவையாகக் கருதினார்.
யேர்மனியில் தான் வசித்து வந்த கொமர்ஷ்;பாக் நகரத்தில் தனது பணியை ஆரம்பித்துச் செயற்பட்டார். 1983ல் தமிழீழ விடுதலைப்புலிகள் யேர்மனிக்கிளையின் நகரப் பிரதிநிதியாக இவர் நியமிக்கப்பட்டார். சுயநலமற்ற சுறுசுறுப்பான இவரது செயற்பாடு, மிக விரைவிலேயே இவரை மாநிலப் பொறுப்பாளர் ஆக்கியது. தன்னை முன்னிலைப் படுத்தாத சிநேகபூர்வமான, சுயநலமற்ற இவருடைய தீவிர செயற்பாடு அந்த மாநிலத்தில் புலிகள் மீதான அன்பு பெருக்கெடுக்க வழிவகுத்தது. சுரேந்தியின் சரியான கொள்கை விளக்கமும் நட்பான அணுகுமுறையும் அந்தக் காலகட்டத்தில் இயங்கிய பல்வேறுபட்ட குழுக்களிடம் இருந்து புலிகளின் அமைப்பை இனம்காட்ட இவருக்குத் துணை புரிந்தன.
பண்பான செயற்பாட்டால் பங்களிப்பை அதிகரிக்கச்செய்த மனிதராக இவர் விளங்கினார். அன்றைய காலகட்டத்தில் இவருடைய செயற்பாடும் அணுகுமுறையும் பெரிதும் வேண்டப்பட்ட ஒன்றாக இருந்தது.
தான் ஏற்கனவே கற்றிருந்த ஒளி, ஒலித்துறை தொழில் நுட்ப அறிவு காரணமாக, ஏற்கனவே பல பெறுமதியான தொழில் நுட்பசாதனங்களை இவர் வாங்கிச் சேகரித்திருந்தார். இவர் மிகவும் நேசித்த பெறுமதி மிக்க இவருடைய மொத்த உடைமையும் இவைதான் எனக் கூறலாம்.
1984ம் ஆண்டு இயக்கத்தின் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் அந்த உடைமைகள் அனைத்தையும் விற்று மொத்தப்பணத்தையும் நாட்டு விடுதலை நிதிக்காகக் கொடுத்தார். இந்தச் செயலும் அந்தக் காலகட்டத்தில் யேர்மனியைப் பொறுத்தளவில் மிகவுயர்ந்த பங்களிப்பாகவே இருந்தது. தனது உடைமை முழுவதையும் அர்ப்பணித்த அந்தச் செயலுக்கு இவர் சொன்ன காரணம் ‘என்னை உங்களுடன் இணைத்துக்கொண்டேன், எனது உடைமைகள் வேறு, புலிகள் உடைமைகள் வேறு அல்ல’. இந்த உரையாடலின் போது மாவீரர் லெப்.கேணல் சராவும் கூடவே இருந்தார். அன்றே யேர்மனிக்கிளை சுயநலத்தைத் தூக்கியெறிந்து மிகச்சிறந்த தேசப்பற்றாளனாக சுரேந்திரகுமார் அவர்களை இனம் கண்டு கொண்டது.
மாநில பொறுப்பாளராக இவர் இருந்த காலத்திலேயே, புதிய சிந்தனையோடும் சுறுசுறுப்பான செயற்பாடுகளோடும் இயங்கிய இவர் விடுதலை உணர்வுள்ள பல கலைஞர்களை அமைப்பிற்கு அறிமுகப்படுத்தினார். கலை பண்பாட்டுப் பிரிவு உதயமான போது அதற்கு முற்றிலும் தகுதிபடைத்த சுரேந்திரகுமார் அவர்கள் பொறுப்பாளராக்கப்பட்டார். யேர்மனிக் கிளையின் கலாச்சாரப் பிரிவுப் பொறுப்பாளராக இவர் கடமை ஆற்றிய காலம், பல புதிய கலைப்படைப்புக்கள் தோன்றிய பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். அனைத்துத் துறையிலும் ஆர்வம் கொண்ட புதிய கலைஞர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். இசைக் கலைஞர்களின் இணைப்பால் ‘தமிழீழம்’ இசைக்குழு உருப்பெற்றது. தமிழிசைக் கலைஞர்கள் விடுதலைக் கீதத்தை இசைக்கும் புதுமை ஆரம்பமானது. பக்திரசத்தைப் படைத்த பரதம், சுதந்திர தாகத்தை வெளிப்படுத்தி புரட்சி படைத்தது. இதன் மூலம் யேர்மனி தழுவிய கலைநிகழ்ச்சிகளை விடுதலை உணர்வு பொங்க நடத்தினார்.
விடுதலை உணர்வு பெருகியது, பெருநிதியும் திரட்டப்பட்டது.
1986 மார்கழியில் யேர்மனி அரசால் கடைப்பிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் சம்பந்தமான நடவடிக்கையின் போது, செயற்பட்டாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட வேளையில், இவர் கைதாகி பின்னர் விடுதலை ஆனார். அனைத்து முக்கியமானவர்களும் சிறையில் இருந்த வேளையில், யேர்மனிய அரசின் இறுக்கமான செயற்பாடுகளால் மக்கள் பயமுற்றிருந்த சூழலில், அமைப்பின் யேர்மனிக்கிளையின் பொறுப்பை ஏற்று இவர் புரிந்த பணி அதிசயிக்கத்தக்கது. தனது வேலையை ராஜினாமாச் செய்து கொண்டு, யேர்மனி வாழ் தமிழ்மக்களுக்கு ஏற்றப்பட்டிருந்த வீணான பயத்தைப் போக்கவும், அமைப்பின் செயற்பாடுகளைச் சீர்ப்படுத்தவும், அனைத்து நகரங்களுக்குமான தொடர்புகளை நிலைக்கச் செய்யவும், இவர் மேற்கொண்ட முயற்சிகள் சொல்லில் அடங்காதவை. ஆறு மாதத்தில் யேர்மனி தழுவிய செயற்பாட்டை ஒழுங்கிற்குக் கொண்டு வந்தது இவருடைய நிர்வாகத் திறனுக்கு ஒரு சான்றாகும்.
பல புதிய இளைஞர்கள் நிர்வாகத்துறையில் சேர்க்கப்பட்டு பிரச்சாரம் பரவலாக்கப்பட்டு மாநில ரீதியாக தொலைபேசிச் சேவை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது, இவரது காலத்திலேயே.
விடுதலைப்புலிகள் யேர்மனியக் கிளையின் உத்தியோகபூர்வ ஏடான ‘தமிழீழச் செய்திகள்’ இவரது கடும் முயற்சியால் வெளிவந்த ஒரு ஆக்கமாகும். கணணிமுறை வழக்கில்லாத அந்த நாட்களில் இவருடைய கலைத்தன்மையுடன் கூடிய பெரு முயற்சியே இந்தச் சஞ்சிகையின் வடிவமாக, உள்ளடக்கமாக அமைந்தது. தமிழீழ நிலைப்பாடு மக்களிற்குப் பலனாக வெளிவந்த ஒரேயொரு சஞ்சிகையாக இது விளங்கியது. சுரேந்தி ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதை இந்த ஏடு விளக்கி நின்றது.
சுரேந்தி அவர்கள் கற்பனை நிறைந்த பல இனிய பாடல்களை இயற்றி உள்ளார். விடுதலையை முன்னெடுக்கும் வீரமான பல பாடல்களை நித்திலா என்ற பெயரில் வரைந்து தமிழுலகிற்கு தந்த ஒரு புரட்சிக் கவிஞர் இவர். இன்றும் நிலைத்து விடுதலையை வலியுறுத்தும் இவரது பாடல்கள் சாகாவரம் பெற்றவை.
18-10-1991 அன்று இறுதிமூச்சு முடியும் வரை இவர் ஆற்றிய சேவையும் கடின உழைப்பும் எமது அமைப்பின் யேர்மனியக் கிளையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சக்தியாக விளங்கின எனலாம்.
இவரது தந்தை இவருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ‘மகனே நீ ஆற்றும் தொண்டு வரவேற்கத்தக்கது’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதனைப் படித்துப் பேருவகை கொண்ட, தந்தைமேல் பாசம் நிறைந்த சுரேந்தி அவர்கள், தந்தையின் மறைவின் போது சிந்தை கலங்காது அமைப்பின் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதையே, தந்தையின் ஆன்ம ஈடேற்றலுக்கு தான் செய்யும் வழிபாடு எனக் கருதினார். அமைப்புடன் இணைந்து கொண்டு 1983ல் தமிழீழம் சென்று மண்மீட்புப் போரில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பி, அதற்கான ஆயுத்தங்களைச் செய்து முடித்திருந்த சுரேந்தி அவர்கள், யேர்மனிவாழ் தமிழீழமக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த மாயையை அகற்றும் பணிக்குத் தேவையெனக் கருதி, அமைப்பால் யேர்மனியில் பணியாற்றும்படி வேண்டப்பட்டது. இவரது செயற்பாட்டின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது. உவமைகளை அனாசயமாக அள்ளி எறிந்து கவிக்கோலம் போடும் உவமைக் கவிஞர் இவர்.
‘அடிவானம் கடலோடு உறவாடுமா – எமை
அழிப்பாரின் எண்ணம்தான் ஈடேறுமா’ என்ற பாடலில் உவமைக் கவிஞர் என்ற முத்திரை பதித்து நிற்கிறார்.
‘புயல் ஒன்று கடந்து போர்மேகம் கலைந்து
புதுத் தென்றல் தவழும்நாள் வருகின்றது!’ என்ற பாடலில ‘விதிமாறும் வேளை சதிமாறும் என்று வரலாறு ஒன்று அசைகின்றது!
அலையாடும் கடலும் புலி வெல்லும் என்று
தரை மேவி செய்தி சொல்கின்றது’
என குறிப்பிட்டு தீர்க்கதரிசனமாக கவிபடைத்துள்ளார். அலைகடலிலே களிநடம் புரிந்து மண்காக்கும் கடற்புலிகளை இன்று நாம் பெற்றுள்ளோம். அந்த வீரத்தை தரைமேல் வந்து அலை சொல்லும் என கடற்புலிகள் தோற்றம் கொள்ள முன்னரே பாடிய தீர்;க்கதரிசனக் கவிஞராக இவர் விளங்கினார். இன்று ஒலித்தட்டில் இடம்பெற்று, அவர் விதைத்த கவிதைகள், பாடலாக பலர் மனதில் விடுதலைப் பயிராகி, வீரத்தை விளைத்து நிற்கிறது.
‘நிதி வேண்டும் தமிழீழ மண்மீட்க- புது
விதி செய்யும் புலிப்படை தம் கரம் ஓங்க!’
என்ற இவரது பாடல், யேர்மனி தழுவிய எமது கலை நிகழ்ச்சிகளில் மக்கள் மனதை கொள்கை கொண்டு பங்களிப்பைப் பெருக்கியது. இவரது கவிதையின் பலத்தை வெளிப்படுத்திய சான்றாகும்.
இவருடைய இல்வாழ்க்கை பற்றி வினா எழுப்பும் போதெல்லாம் ‘எல்லாமே தமிழீழத்தில் தான்’ என்பதே இவரது பதிலாக இருந்து வந்தது. ‘நான் இன்னுமொரு நாடு செல்வதானால் அது தமிழிழமாகத்தான் இருக்கும்’ என்று கூறிவந்த இவர் மேலிட அழைப்பின் பேரில் சுவிஸ் நாட்டிற்கு மோட்டார் வண்டியில் பயணமானபோது, யேர்மனிய எல்லையைத் தாண்டும் முன்னரே விபத்தொன்றில், அமைப்பின் ஏனைய சகாக்களுடன் மரணத்தை தழுவிக் கொண்டார். உண்மையின் உறைவிடமான இந்த சத்திய புருஷனின் வார்த்தை இறுதிவரை முழுமை பெற்றதாகவே எண்ணத் தோன்றுகிறது.
புகழை விரும்பாத, ஆடம்பரத்தை ஏற்காத, பாராட்டில் இருந்து ஒதுங்கி வாழ்ந்த ஒரு மேதைதான் மேஜர் சுரேந்திரகுமார். ஒவ்வொரு செயற் திட்டத்தையும் ஒரு மூலையில் உட்கார்ந்து பதட்டம் இன்றி செய்து முடிக்கும் சிறந்த திட்டமிடல் நிபுணன்தான் மேஜர் சுரேந்திரகுமார். புலிகளிற்கே உரித்தான குறைந்த பேச்சும் நிறைந்த செயற்பாடும் உருவம் பெற்ற மனிதர்தான் மேஜர் சுரேந்திரகுமார்.
அவரை இழந்த எமக்கு அவரது வாழ்க்கை, ஒரு முன்னோடியாக, ஒரு உத்வேகமாக, ஒரு உதாரணமாக உயிரூட்டி நிற்கிறது.
![]()