×

ஒரு மனிதன் சாதாரணமாக நாளொன்றுக்கு குறைந்தது ஆறு மணி நேரம் 02

ஒரு மனிதன் சாதாரணமாக நாளொன்றுக்கு குறைந்தது ஆறு மணி நேரம்

ஒரு மனிதன் சாதாரணமாக நாளொன்றுக்கு குறைந்தது ஆறு மணி நேரம் என்றாலும் தூங்கவேண்டும் என்பதுதான் மருத்துவ ஆய்வாளர்களின் கருத்து. ஆனால், பால்ராஜ் அண்ணை நாளொன்றுக்கு முழுமையாக மூன்று மணி நேரம் தூங்கியதைக்கூட நாங்கள் பார்த்ததில்லை. மக்களின் விடுதலைக்காக 25 வருடங்களுக்கு மேலாக எப்போதும் விழித்திருந்த அந்தக் கண்கள், இப்போதுதான் ஓய்வென்றால் என்னென்று அறிந்துகொண்டிருக்கும் என நினைக்கின்றேன்.

காட்டில் ஓய்வின்றி ஒரு விடுதலைப் போராளியாக அவர் உழைத்த அந்த நாட்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கும். போராளிகளுக்கு கட்டளையிடுபவராக மட்டுமில்லாது, அந்தப் போராளிகளோடு தானுமொரு போராளியாகவே அவர் வாழ்ந்து, ஏனைய போராளிகளுக்கும் ஒரு வழிகாட்டியாக அவர் இருந்தார்.

இந்திய இராணுவ முற்றுகை இறுகி, காட்டில் ஆயுதங்களுக்கு பெரும்
தட்டுப்பாடு நிலவிய காலம் அது. யாழ். தென்மராட்சி ஊடாக போராளிகள் கொண்டு வரும் பொருட்களை, ஆனையிறவுக்குப் பின்பக்கம் உள்ள நல்லதண்ணித்தொடுவாய்க்கு சென்று பெற்று வந்துதான் காட்டிலுள்ள போராளிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். வாகனங்களில் சென்று அவற்றை ஏற்றிவரமுடியாது. கால்நடையாக இரகசியமாகச் சென்றே அங்கு காத்திருக்கும் போராளிகளிடம் ஆயுதங்களையும் பொருட்களையும் பெற்று வரவேண்டும். மிக நீண்டதூரப் பயணம். திரும்பிவரும்போது பெரும் சுமையுடன் நடக்கவேண்டும். பொருட்களை வைத்துத் தூக்குவதற்கு பைகள் கூட இருக்காது. சரத்தை மூட்டையாகக்கட்டி அதனுள் பொருட்களை வைத்து முதுகில் அடித்துக்கொண்டுதான் வரவேண்டும்.

வவுனியாவின் ஒரு பிரதேசத்தில் நிற்கும் பால்ராஜ் அண்ணை, அங்கிருந்து நல்லதண்ணித் தொடுவாய்க்கு சாதாரண ஒரு பயணம் போலவே புறப்படுவார். மிக நீண்டதூரப் பயணம். வழியில் பல்வேறு ஆபத்துக்களை சந்திக்க வேண்டும். ஆனாலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் பொறுப்பை வகித்த பால்ராஜ் அண்ணை வவுனியா சென்று அங்குள்ள போராளிகளின் தேவைகளை அறிந்துகொண்டு, அங்கிருந்து முல்லைத்தீவிற்கு வந்து அங்குள்ள போராளிகளின் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டே பயணத்தைத் தொடருவார்.

காட்டு வழியாக நடை தொடங்கினால், பகல் முழுவதும் நடைதான். காட்டு uவெயிலும், நடைக் களைப்பும் சேர்ந்து, தண்ணீர்த் தாகம் எடுத்துவிடும். எல்லோரிடமும் சிறிய தண்ணீர் கான் இருக்கும். ஆனாலும் யாரும் நினைத்த மாத்திரத்தில் கானிலுள்ள தண்ணீரை எடுத்துக் குடித்துவிட முடியாது. அதற்கான நேரம் வரும். அப்போது எல்லோரும் ஓரிடத்தில் அமர்ந்து கானைத் திறந்து அதன் மூடியினுள் தண்ணீரை விட்டு குடிக்கவேண்டும். ஒரு மூடி தண்ணீர்தான். அவ்வளவும் தான் அப்போதைய தாகத்தை தீர்க்கும் மருந்து. பால்ராஜ் அண்ணையும் அந்த ஒரு மூடி தண்ணீரைத்தான் அருந்துவார். அந்தத் தண்ணீருடன்தான் மீண்டும் பயணம் தொடரும்.

காட்டுப் பாதைகளில் சிலவேளைகளில் குளங்கள் தென்படலாம். ஆனால், குளத்தில் நீரருந்த வரும் மிருகங்களை வேட்டையாடுவதற்கு கரைக்கு அருகில் மறைந்து காத்திருக்கும் வேட்டைக்காரர்களைப்போல், தண்ணீர் எடுக்க வரும் போராளிகளை சுட்டு வீழ்த்துவதற்கென்றே, குளக்கரைகளை இலக்குவைத்து இந்தியப் படையினர் எப்போதும் விழிவைத்துக் காத்திருப்பார்கள். கப்டன் வாதவூரானுக்கு தண்ணீர் எடுக்கச்சென்ற இரு போராளிகளும் அவ்வாறுதான் அவர்களின் இலக்கில் அகப்பட்டுக் கொண்டவர்கள். அந்தப் போராளிகளுக்கு என்ன நடந்தது என்பது பின்னர்தான் தெரியவந்தது. அவர்கள் மீது படையினர் வேட்டுக்களைத் தீர்க்க, இருவரும் குளத்தில் பாய்ந்து நீந்த
முயற்சித்துள்ளனர். இதன்போது ஒரு போராளி இராணுவத்தினரால் கைது செய்யப்பட, மற்றைய போராளி வேகமாக நீந்தி மறுகரையை அடைந்து தப்பித்துக்கொண்டார். எனவே, காட்டுப் பயணத்தின்போது குளங்களில், அவசரப்பட்டு இறங்கி தண்ணீர் எடுக்க பால்ராஜ் அண்ணை யாரையும் அனுமதிப்பதில்லை. தண்ணீர் ஒரு மூடி என்றால், அன்றைய உணவு ஓரிரு பிஸ்கற்றுக்கள்தான்.

பகல் முழுவதும் நடந்து இருளும்போது சற்று ஓய்வெடுக்கலாம் என்று எதிர்பார்த்தால், அந்த நேரத்தில்தான் இராணுவத்தினர் நடமாட்டமுள்ள பகுதியைக் கடக்க முடியும் என பால்ராஜ் அண்ணை கூறுவார். இரவிரவாக இராணுவத்தினரின் பகுதியினூடாக நடைதொடரும். நள்ளிரவு தாண்டிய பின்னரே ஓய்வெடுக்க முடியும். மனம் உறுதியாக இருந்தாலும், உடல் சோர்ந்து எம்மையறியாமலே நல்ல உறக்கமும் வந்துவிடும். ஆனால், பால்ராஜ் அண்ணை உறங்கமாட்டார். அதிகாலை நான்கு மணிக்கு முன்னரே எழுந்து விடுவார். அந்த மம்மல் பொழுதில் கிராமத்தைக் கடந்தால்தான், மற்றப் பகுதிக்கு போகமுடியும் எனக்கூறி எல்லோரையும் எழுப்பி நடக்கத் தொடங்கிவிடுவார். மீண்டும் நடைப் பயணம் தொடரும். நயினாமடு, நெடுங்கேணி, பழம்பாசி, களிக்காடு, மதவாளசிங்கம்குளம், பூதம்வயல், முள்ளியவளை, தண்ணீரூற்று, கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, பிரமந்தன், விசுவமடு நல்லதண்ணித்தொடுவாய் என பயணம் தொடரும். ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீற்றர்கள் நடக்கின்றோம் என்பது தெரியாது. ஆனால், நடையிலேயே நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன என்பது மட்டும் புரியும்.

மலம் கழிக்க முடியாது. முதலில் சாப்பிட்டால்தானே மலம் கழிப்பதற்கு. அப்படிக் கழித்தாலும் சுத்தம் செய்வதற்கு தண்ணீர் இராது. அதனால், எங்கையாவது ‘பேப்பரைக்’ கண்டால் போராளிகள் விடமாட்டார்கள். ‘இந்த ஒரு விடயத்தில்தான் நாங்கள் வெளிநாட்டவர்கள் போல் வாழ்கின்றோம்’ என்று போராளிகள் நகைச்சுவையாகக் கூறுவார்கள். ஆனாலும், விசயம் தெரியாமல் தூள் சுற்றிய பேப்பரை எடுத்துவந்து, அதன் எரிவில் போராளிகள் அலறிய சம்பவங்களும் உண்டு.

பல் தீட்ட முடியாது. குளிப்பும் இராது. இந்த நிலைமையில் சில வேளை களில் கிராமங்களைக் கடந்து செல்லும்போது போராளிகளைக் கண்ட மகிழ்வில் மக்கள் ஓடிவந்து குவிந்து, நலம் விசாரிக்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், அவர்கள் கிட்ட நெருங்கி வரும்போது, போராளிகள் எட்ட எட்ட நகருவார்கள். வாரக்கணக்காக குளிக்காமல், பல் தீட்டாமல் இருக்கும் தங்கள் உடலின் நாற்றம் அவர்களுக்கு அருவருப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம்தான் காரணம். ஆனால், அவற்றையெல்லாம் கணக்கில் எடுக்காமல் மக்கள் மிக நெருங்கி வந்து தோள்தடவி கதைக்கும்போது, இருந்த களைப்பும், பசியும் எங்கோ காணாமல்போய்விடும்.

– பசிலனின் இன்னொரு போர்முகம் பால்ராஜ்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments