
இலேசாய்க் கருதி நுழைந்த எதிரி…
எடுத்து வைத்த ஒவ்வோர் அடியையும் புல்லும் எதிர்த்துப் போர்க் கோலம் பூண்டது…
பூவும் நெருப்புப் பொறியாய்ப் பொசுக்கியது…
அந்தக் கணங்களில் எமது களங்களில்
பொன்னை உதறியும் பூவை விலக்கியும் மானுடப் பாதி மறுபடி எழுந்தது.
ஏந்திய ஆயுதமும் உயர்த்திய பதாகையும் வீழ்ந்து படாமல் வீரத்தோள் கொடுத்தது…
எதிரியின் இலக்கு இனஒடுக்கு முறைமட்டுமல்ல…
பாலியல் ரீதியான பலாத்காரமுந்தான்…
துருப்பிடித்த நினைவுகளோடு நுழைந்த எதிரிக்கு வளைத்துப் பிடிக்கும் கொடிகளாய் இல்லை….
பறித்துக் கசக்கும் மலர்களாய் இல்லை….
எதிர்க்கும் பெண்புலிகள் என்பதை நிறுவினீர்…
இறந்து வாழும் வாழ்க்கையை நீரூபித்தீர்…
மரணத்தில் தன்மான வாழ்க்கையை நிச்சயித்த வீராங்கனைகளே! உமக்கிது காணிக்கை…..
– சுதந்திரதாகம்
05.08.1989