
காப்பரண் மரங்கள்
கதைபேசின.
வான்நிலவும்,
உடுக்களும் வந்தன.
சேர்ந்துண்ண கார்முகிற்
துளிகளில் -முகம்பார்த்துத்
தலைசீவி.
பனிக்கால இரவுகளை பயிற்சிக்காய் பகலாக்கி,
இளமைக் கனவுகளின் முளைகிள்ளி காவலுக்காய் உயிர்தேக்கி -உடல் தின்ற குண்டுக்கு உதிரத்தால் பசியாற்றி.
விழுப்புண்கள் ஆறமுன்னம் விரைகின்றேன் எல்லைக்கு.
மீண்டும் பதுங்கு குழி.. துப்பாக்கி.. எத்தனை உயிர்களின் துயிலலுக்கான துயில்மறப்பு.
இன்றோ, நாளையோ என்றிருக்கும் வாழ்வுக்காய் என்னுறவுகள் அழுதலில் எனக்காறுதலில்லை.
உண்ணும் சோற்றில் ஒருபிடி, உடுக்கும் துணியில் ஒரு முழம், இல்லாதோர்க்கீயும் மனத்திறன் எல்லாம் உறவென நினைக்கும் ஈரம்.
பேதமகற்றிய வாழ்வின் வீரம். காதலின் மேலெனக் கருதுவேன். யான் நெஞ்சினிற் சுமக்குமென் தாகத்தை ஆற்ற -நினைவுகளால் நீர்விடுங்கள் உறவுகளே……
– அம்புலி