×

சமாதான காலத்தில் சிறீலங்கா கடற்படையினரின் யுத்த நிறுத்த மீறலால்

சமாதான காலத்தில் சிறீலங்கா கடற்படையினரின் போர் நிறுத்த மீறலால் பன்னாட்டுக் கடற்பரப்பில் 14.06.2003ம் ஆண்டு அன்று விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது.

இந்தோனேசியாவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டு படகுகளை தமிழீழத்திற்க்கு கொண்டு வரும்படி தேசியத் தலைவர் அவர்களால் பன்னாட்டுக் கடற்பரப்பிலிருந்த போராளிகளுக்கு பணிக்கப்பட்டிருந்தது. அதற்கமைவாக மாவீரரான மேந்தலை லெப்.கேணல் வெற்றியரசன்( ஸ்ரிபன்) அவர்கள் தலைமையிலான கப்பல் ஒரு படகையும் மாவீரரான மேந்தலை
மேஜர் நிர்மலன் அவர்கள் தலைமையிலான எம்வி சொசின்( அ செய்சின்) என்ற கப்பல் இன்னொரு படகையும் கொணரும் பொறுப்பை பொறுப்பெடுத்தன.

அதன்படி 10.3.2003 அன்று தமிழீழத்தின் கிழக்கு கரையிலிருந்து 200 நாட்டிக்கல் மைல் தொலைவில், பன்னாட்டுக் கடலில் சிங்களக் கடற்படையின் தாக்குதலில் மாவீரரான மேந்தலை லெப்.கேணல் ரஞ்சன் அவர்கள் தலைமையிலான எம்.ரி. கொய்மர் கப்பலின் இழப்பிற்குப் பின் நடக்கும் முதல் கடல் வழங்கல் நடவடிக்கை என்பதால் மிகவும் அவதானத்துடன் இந் நடவடிக்கை இடம்பெற்றது .

இந்நடவடிக்கையானது மேந்தலை ஸ்ரிபன் தான் கொண்டு செல்லும் படகை கரையிலிருந்து 250 மையில் தூரத்தில் வைத்து மேந்தலை நிர்மலனிடம் கொடுக்க,
அவர் அந்த இருபடகுகளையும் முல்லைத்தீவு கடலிலிருந்து 200 கடல்மைல் தூரத்தில் அப்படகுகளை விட வேண்டும். அங்கிருந்து கடற்புலிகளின் வேகச் சண்டைப்படகுகளின் துணையுடன் அப்படகுகள் தமிழீழத்தை வந்தடைய வேண்டும் என்பதுவே திட்டமாகும்.
இத்திட்டத்திற்கமைவாக முதலாவதாக மேந்தலை நிர்மலனின் கப்பல் படகுகளை விடவேண்டிய இடத்திற்கு தனது படகுடன் புறப்பட அதன் பின் இரண்டாவது நாள் ஸ்ரிபனது கப்பல் தனது படகுடன் புறப்பட்டது. புறப்பட்ட அன்றிரவு இரண்டு
கப்பல்கள் சுமார் நான்கு கடல்மைல்கள் தூரத்தில் கிடையாக வேகமாக சென்றதை ஸ்ரிபனது கப்பலிலிருந்தவர்கள் கதுவீ மூலமாக கண்காணித்தனர். இருந்தாலும் இரவென்பதாலும் பன்னாட்டு கப்பல் போக்குவரத்துப் பாதையென்பதாலும் இவர்கள் தம்மை நெருங்கிக்கொண்டிருந்த பகைக் கப்பல்களைக் கருத்திலெடுக்காமல் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.

14.06.2003 அன்று அதிகாலை கடற்படைக் கப்பல்கள்
மேந்தலை நிர்மலனின் கப்பலை வழிமறித்தன. இத்தகவலை உடனடியாக மேந்தலை ஸ்ரிபனுக்கு மேந்தலை நிர்மலன் அறிவிக்க, மேந்தலை ஸ்ரிபன் அவர்கள் தனது கப்பலை பன்னாட்டு கப்பல் பாதையில் செலுத்தினார். மேந்தலை நிர்மலனது கப்பல் கொணர்ந்த படகில் மற்றொரு கப்பலின் மேந்தலையான லெப்.கேணல் தென்னவனுடன் இன்னொரு போராளியும் உடனிருந்தார். இவ் இக்கட்டான சூழலில் மேந்தலை நிர்மலனின் கப்பலிலிருந்த 2ம் அலுவலர் லெப் கேணல் வீரமணி அவர்கள் கப்பலிலிருந்த படகை கட்டியிழுத்து வந்த கயிற்றை வெட்டி இம்முற்றுகையிலிருந்து தப்புமாறு பணித்தார். படகில் முற்றுகையை விட்டுத் தப்ப முயற்சித்தபோதும் கடற்படைக் கப்பல்கள் விடவில்லை, இருந்தாலும் ஒருகட்டத்தில் கடற்படைக் கப்பலை மோதுவதைப்போல படகிலிருந்தவர்கள் முயற்சித்தபோது கடற்படைக் கப்பல்கள் விலகிட அம் முற்றுகையிலிருந்து படகும் வெளியேறியது.

அந்நேரம் சமாதானச் சூழல் என்பதால் இவர்களை மீட்கப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றது. ஒருகட்டத்தில் கப்பலிலிருந்தவர்களுடன் தொடர்பிலிருந்த தென்னவன் அவர்கள் “நாங்கள் கப்பலுக்கு வரவா?” எனக் கேட்க, “கப்பலுக்கு கடற்படைக் கப்பல்கள் தாக்குதல் மேற்கொள்கின்றன, வரவேண்டாம், நீங்கள் தப்புங்கோ” எனக் கப்பலில் இருந்தவர்கள் கூறிடவும் அவர்களுடனான தொடர்பும் துண்டிக்கப் படுகிறது, படகில் இருந்தவர்களுடன். பேச்சுவார்த்தைகள் பயனின்றிப் போக நீண்ட கடலனுபவம் கொண்ட போரளிகள் பதினொருவரும் நாட்டுப்பற்றாளர் ஒருவருமாக கடலிலே காவியமானார்கள்.

மேந்தலை லெப் கேணல் தென்னவனின் படகு அன்றிரவு மேந்தலை ஸ்ரிபனின் கப்பலால் மீட்கப்படுகிறது.

இத்தாக்குதலில் மேந்தலை மேஜர் நிர்மலன், தலைமை அலுவலர் லெப். கேணல் கதிர், 2ம் அலுவலர் லெப். கேணல் வீரமணி, 3ம் அலுவலர் மேஜர் கண்ணியநாடன், வானலை அலுவலர் லெப். கேணல் கஜேந்திரன், தலைமை பொறியியலாளர் அன்புக்குமரன், 2ம் பொறியியலாளர் கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன், 3ம் பொறியியலாளர் கடற்கரும்புலி மேஜர் நிமல் எ நிமால், மின் பொறியியலாளர் மேஜர் வீரநாதன், கப்தன்(போசன்) கடற்கரும்புலி மேஜர் மணியரசன், கடலோடி கப்டன் செழியன் ஆகிய 11 கடற்புலிகளின் சிறப்புப் படையணி போராளிகளும் நாட்டுப்பற்றாளர் மோகன் ஒருவருமாக 12 ஆழ்கடலோடிகள் அற்றை நாளில் பன்னாட்டுக் கடலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments