×

மறைமுகக் கரும்புலி லெப் கேணல் சோழன் 

மறைமுகக் கரும்புலி லெப் கேணல் சோழன் 

காத்திருந்து பகையின் கதை முடித்த எங்கள் மறைமுகக் கரும்புலி லெப் கேணல் சோழன்!!!

சிறுகக்கட்டிப் பெருகவாழும் வீடுகளில் விருந்தோம்பி வரவிருந்து காத்திருக்கும் பண்பாடுமாறாத மனித உள்ளங்கள். தமிழீழ சுதந்திரப்போருக்காயப் பிள்ளைகளை அனுப்பி வைத்த வெற்றிக்காய்க் காத்திருக்கும் வீரமிகுதாய்க்குலம். இவையெல்லாம் தமிழனின் இருப்பு இன்னும் அழிந்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டும். மண்ணை நம்பி வாழ்ந்திருக்கும் இந்தமக்கள் தங்கள் மண்ணை சிங்கள ஆக்கிரமிப்பில் பறிகொடுத்துவிட விருப்பில்லை மண்ணை மாத்திரமல்லாது தங்கள் வாழ்வின் அடித்தளமாய் விளங்கும் பண்பாட்டையும் இழந்துவிடத்தயாரில்லை.

ஆனால் இவ்விரண்டையும் அழித்து ஆக்கிரமித்துவிட சிங்கள பேரினவாதம் கங்கணம் கட்டிநின்றது. வகைதொகையின்றி கொடூரமாக இவர்களை கொலை செய்வதன் மூலம் அச்ச உணர்வினை ஏற்படுத்தி இம்மண்ணையும் பறித்து, பண்பாட்டையும் பறித்துவிட முடிவு செய்தது. சிங்கள பேரினவாதத்தின் இந்த முடிவின் விளைவுதான் கொக்கட்டிச்சோலைப் படுகொலை (28,29,30-01-1987 – மூன்று நாட்களில் 233 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்), சத்துருக்கொண்டான் படுகொலை (09-09-1990 – 42 சிறுவர்கள் மற்றும் 85 பெண்கள் உட்பட 150க்கும் மேல் கொல்லப்பட்டனர்) , வந்தாறுமூலைப்படுகொலை (05-09-1990 – 158 தமிழ் இளைஞர்கள் வெட்டியும், சுட்டும், தீயிட்டு கொழுத்தியும் படுகொலை செய்யப்பட்டனர்), புல்லுமலைப்படுகொலை, உடும்பன்குளப் படுகொலை, தோணிதாண்டான்மடுப் படுகொலை என நீண்டுசெல்கின்றது.

இத்தனை படுகொலைகளிற்கும் மூலமாக செயற்பட்ட சூத்திரதாரி அவன் வேறு யாரும் அல்ல .மேஜர் ஆக இருந்து இறப்பின் பின் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற லறி விஜேரட்ன அவன் மனைவியும் ஒரு இராணுவ அதிகாரியே பிரிகேடியர் இந்திரா விஜேரட்ன பல படுகொலைகளுக்கு திட்டமிடலினை நிகழ்த்தி, நூற்றுக்கணக்கான தமிழ் உயிர்களை காவு கொண்ட சிங்கள தீவிரவாத அதிகாரியான மேஜர் லறி விஜேரட்னவை எம் மண்ணிலே கணக்கு தீர்ப்பதென புலனாய்வு போராளிகள் கங்கணம் கட்டி தீவிரமான புலனாய்வு தகவல் சேகரிப்புகளை மேற்கொண்ட வேளை தான் மாற்றலாகி வடமராட்சி மண்ணில் வந்திறங்கினான் லறி விஜேரட்ன.

மக்களுடனான தொடர்பாடல்களில் லறி விஜேரட்ன வித்தியாசமானவன் மக்களின் வீட்டு விசேஷங்கள், உட்பட மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதாக வெளிவேஷம் போட்டு அம்மக்களிடத்திலேயே புலனாய்வு தகவல்களை சேகரிப்பதில் வல்லவனாகினான் . மக்களோடு மக்களாக வாழ்ந்த எம் போராளிகளை இனம் காண்பதற்கு பல பொது மக்கள் கட்டமைப்புகளை லறி விஜேரட்ன ஏற்படுத்தி இருந்தான் .பிரஜைகள் குழுக்கள், விழிப்பு குழுக்கள் என்பனவற்றுள் தனக்கு தகவல் தரும் முகவர்களை ஊடுருவ செய்து மறைமுக இயக்க உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை பெற முயற்சி செய்தான்.

அதன் விளைவாக வடமராட்சி புலனாய்வு துறைக்கு பொறுப்பாக இருந்த இளஞ்செழியன் இனம் காணப்பட்டு இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு நடந்த மோதலில் மேஜர் இளஞ்செழியனாக இம் மண்ணை முத்தமிட்டான் . அதனை தொடர்ந்து வதிரி பகுதியில் எம் தாக்குதல் படையணி தளபதிகளான லெப் கேணல் அர்ச்சுனா ,மேஜர் செல்வம் உட்பட ஏழு போராளிகளின் தங்குமிட பதுங்கு குழியின் தகவல்களை பெற்று சுற்றிவளைப்பு தாக்குதல் மூலம் அப் பதுங்கு குழியினை தகர்த்து நேரடி சமரின் மூலம் அவ் ஏழு போராளிகளும் வடமராட்சி வதிரி மண்ணில் விதையாகி போகினர்.

வடமராட்சி மண்ணில் நின்ற புலனாய்வு போராளிகள் பலருக்கு மிகச் சவாலான காலகட்டமாக மாறிய தருணங்கள் அந்த கொடியவனை வழி அனுப்ப வேண்டிய கால கட்டமான வேளை அது. மறைமுக போராளிகள் தமது புலனாய்வு தகவல்களை திரட்டிய வண்ணம் வேவு நடவடிக்கைகளை மேற்கொண்டு தலைமைக்கு தெரிவித்து வந்தனர். அதன் பிரகாரம் ஒரு மாதத்திற்கு முன்னராகவே உறுதி செய்யப்பட்ட தகவல் ஒன்றால் , கயவன் மீது மறைமுக கரும்புலி தாக்குதல் ஒன்றின் மூலம் தாக்குதல் நடத்துவதென முடிவாகின.

அதன் பிரகாரம் கடற்புலிகள் அமைப்பில் செயற்பட்ட போராளி “எமர்சன் ” என்பவர் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் ஆரம்பமாகின .அதனை மேற்பார்வை செய்வதற்கும் , நெறிப்படுத்துவதற்கும் , புலனாய்வுத் துறை பொறுப்பாளர்களில் ஒருவரான ” சோழன்” நியமிக்கப்படுகிறான். இச் சோழனே லறி விஜேரட்ன மீதான தகவல் சேகரிப்புகளை மேற்கொண்டு துல்லியமான தகவல்களை பெற்ற தள பொறுப்பாளர் ஆவார்.

இருவருக்குமான பயிற்சிகள் முல்லைத்தீவில் அமைந்த புலனாய்வுத்துறையின் பயிற்சி முகாம் ஒன்றின் நடந்தேறின. துடியாட்டமும் ,எந்நேரமும் நகைசுவை உணர்வும் நிறைந்த எமர்சன் எம் எல்லோராலும் செல்லமாக சீனி மாமா என்றே அழைக்கப்பட்டான் அதே வேளை அமைதியான சுபாவத்துக்கு சொந்தக்காரன் சோழன் மிக நேர்த்தியான உயர்ந்த மெல்லிய உருவம் .போராளிகளை மிக அமைதியான செயலாக்கத்திற்கும், வழி நடத்தலிற்கும் நன் வழிபடுத்தலுக்கும் ஏதுவானவன். அவனின் அமைதியான சுபாவமே எம்மால் நகைச்சுவைக்கு ஆள்பட்டது. அவரோ அதை பெரிது படுத்தாமல் எம்முடன் இணைந்து தானும் அந்த இடங்களை கலகல படுத்தும் மனப்பாங்கு.

எமர்சனின் தாக்குதல் வியூகங்களை நெறிப்படுத்திய தள பொறுப்பாளர் சோழன் மற்றும் அவர்களிற்கான பாதுகாப்பு புலனாய்வு அணி என்பன புறப்பட தயாரானது .

1998ம் ஆண்டு காலப்பகுதியில் புலனாய்வுத்துறையின் யாழ்ப்பாணத்திற்கான நகர்வு பாதை யாழ் கடல் நீரேரி பகுதியாகவே இருந்தது. மிகவும் நெருக்கடியான இராணுவ பாதுகாப்பு அரண்கள் அமைந்த யாழ்ப்பாணத்தின் கிழக்கு அரியாலை பகுதியை ஊடறுத்து வடமராட்சி பகுதியை அடைவதே அணியின் நோக்கயிருந்தது. அதன்படி அணி நகர்வுகளை யாழ் மாவட்ட புலனாய்வுத்துறையின் அப்போதைய பொறுப்பாளர் திரு. ஞானவேல் மற்றும் உதவி பொறுப்பாளர் திரு. பிரதீப் ஆகியோரின் வழி நடத்தலின் பேரில் தாக்குதல் அணி நகர்வை ஆரம்பித்தது.

யாழ் கடல் நீரேரியூடாக கிழக்கு அரியாலை பகுதியை சென்றடைந்து மட்டுவில் ஊடாக வரணி பகுதியில் தாக்குதலாளி எமர்சனை நிலைப்படுத்திய பின் பருத்தித்துறை நோக்கி தள பொறுப்பாளர் சோழனுடன் நகர்வு ஆரம்பித்தது .வெற்றிகரமான பயணத்தில் தள பொறுப்பாளர் சோழன் பருத்தித்துறை பகுதியில் நிலை படுத்த படுகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே எமர்சன் வரணி பகுதியில் நிலை நிறுத்தபட்டார். நகர்வு அணியின் பணிகள் திறம்பட நிறைவுற்ற பின் பாதுகாப்பு அணி வன்னி திரும்பியிருந்தது.

முன்னர் குறிப்பிட்டது போன்று லறி விஜேரட்ன தொடர்பான முக்கிய தகவல் தான் என்ன? தாக்குதல் திட்டம் தான் என்ன ? என்பதை இப்போது பார்க்கலாம்.

வடமராட்சி மண்ணின் மக்களை தனது புலனாய்வு தந்திரத்தால் கவர்ந்திழுத்து வைத்திருந்த லறி விஜேரட்ன பதவி உயர்வு பெற்று கொத்தலவெல இராணுவ கல்லூரி பணிப்பாளராக நியமிக்கப்பட்டதும், மாற்றலாகி செல்லும் அன்றைய தினமே யாழ் பருத்தித்துறை வர்த்தக சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட பிரிந்துபசார (பிரியாவிடை) நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வரவுள்ளார் என்பதே ஆகும்.

ஆம் அன்றையதினம் மே 14 ,1998 தாக்குதல் திட்டமிட்டதை தள பொறுப்பாளர் உறுதி தகவல்களுடன் தளத்தில் நேரடியாக உறுதி செய்ததுடன் தாக்குதல் நடத்தவென வரணி பகுதியில் நிலைப்படுத்திய கரும்புலி போராளி எமர்சனை பருத்தித்துறை பகுதிக்கு அழைப்பதற்கான முயற்சியினை மேற்கொண்டார். எனினும் எமர்சன் பருத்தித்துறை பகுதிக்கு வர முடியாதவாறு அன்றைய தினம் இராணுவத்தால் வரணி பகுதி தேடுதல் நடவடிக்கை ஒன்றிற்க்காக சுற்றிவளைக்க பட்டிருந்தது. எமர்சன் தனது மறைமுக இருப்பிடத்தில் மறைந்து கொண்டார். தள பொறுப்பாளர் சோழனிற்கு மேற்படி எமர்சனின் நகர்வு தடையான விடயம் தெரிவிக்கப்பட்டது. ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழலை புரிந்து கொண்ட சோழன் உடனடியாக தானே கரும்புலியாக வெடிமருந்து கந்தக பொதியை சுமந்து செல்ல தயாரானான். தலைமையுடனான பல உரையாடல்களின் பின் சோழன் செல்ல வேண்டாமெனவும், இலக்கு பின்னர் அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளலாம் எனவும் ,பொறுப்பாளர்களினால் பல தாக்குதல்கள் நிகழ்த்த முடியும், பல இலக்குகளை அழிக்க முடியும் ஆகவே தாக்குதலினை பிற்போடுமாறும் ,பல வேண்டுகைகள் சோழனிற்கு விடப்பட்ட போதும் சோழனினால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலை தானே செய்ய போவதாகவும் பயிற்சி ஒத்திகையின் போது தானும் தாக்குதல் நடவடிக்கையினை ஒத்திகை பார்த்ததாகவும், தாக்குதல் நடவடிக்கை இலகுவாகவும், வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் எனவும், இலக்கை தவறவிட்டால் குறித்த இலக்கினால் பல இழப்புகளை எம்மவர்கள் சந்திக்க வேண்டும் எனவும் தானே வெடிமருந்துடன் செல்கிறேன் என உறுதியாக கூறி தனது தொலைத் தொடர்பை துண்டித்து கொண்டான்.

பருத்தித்தித்துறை பஸ் நிலைய பகுதியில் அமைந்த அந்த கட்டிடம் விடை பெறும் இராணுவ அதிகாரியை வரவேற்க வர்த்தக சங்க உறுப்பினர்கள் மாலையுடன் காத்திருந்து வரவேற்கும் நிகழ்வினை சோழன் பொறுமையாகவும் ,அவதானிப்புடனும் பருத்தித்துறை முதலாவது குச்சொழுங்கை பகுதியில் நின்று பார்த்துக்கொண்டு இலக்கிற்காய் காத்திருக்கிறான்.

தடல்புரளான நிகழ்வு கவிதை புகழாரங்கள், மாலை சூடலுடன் தங்க சங்கிலி ஒன்றும் பரிசளிப்பு, அப்பாவி எம் மக்களின் மனங்களை மாற்றி, பல இன்னல்களை கொடுத்து, காணாமல் ஆக்கப்பட்ட எம் இளைஞர்களை மனதில் சுமந்து காத்திருக்கிறான் சோழன்.

நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது மதியம் 1.45 லாண்ட் ரோவர் வாகனத்தில் பாதுகாப்பு அணியினால் சூழப்பட்டு வந்து கொண்டிருந்த வாகனத்தின் மீது தான் கட்டியிருந்த கந்தக வெடி மருந்து அங்கியுடன் மோதுகிறான் சோழன், சிங்களம் சிதறியது எங்கும் புகை நெடி ,சிதறுண்ட வாகனத்தின் நடுவே லறி விஜேரட்ன உட்பட நான்கு இராணுவத்தினர் சிதறினர்.

ஜே.ஆர். ஜெயவர்த்தன காலம் முதல் சந்திரிக்கா பண்டாரனாயக்க காலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க தீவிரமாக 15 ஆண்டுகள் சேவையாற்றியமையை கெளரவித்தே (இதில் இரண்டரை வருடங்கள் வடமராட்சியில் 514 ஆவது பிரிகேட் கொமாண்டராக பணியாற்றியிருந்தார்) மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று கொத்தலாவள இராணுவ பல்கலைக்கழகத்திற்கு பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்று இடம் மாறி செல்லும் முன்னரே அக் கொடியவனான லறி விஜேரட்ண மீதான தாக்குதல் தமிழர் தாயக்த்திலேயே இடம்பெற்று அவன் அழிக்கப்பட்டான்.

காத்திருந்து பகையின் கதை முடித்த எங்கள் சோழன் “லெப் கேணல் சோழனாக “கரும்புலி மனம் கொண்ட முதல் மறைமுக கரும்புலியாய் வரலாறாகி போனான். போராளியாய் ,பொறுப்பாளனாய் ,தாக்குதலை வழிநடத்துபவனாய் ,செயற்பட்ட சோழன் சூழல் அறிந்து கரும்புலியாய் உருமாறி வீரகாவியமான வரலாறு இவனையே சாரும்.

நீங்கா நினைவுகளுடன்…

  • அபிராமி
 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments