
தமிழீழ-நடைமுறையரசின்-நீர்மேலாண்மை-1992
ஒவ்வொரு துளி நீரையும் பயன்படுத்துவோம். எந்தவொரு நீராதாரமும் வீணாக்கப்படாமல் திட்டமிட்ட அடிப்படையில் சேமிக்கப்பட்டு மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்காகவும் சுற்று சூழல் சமநிலையை பேணும் நடவடிக்கைகளுக்காகவும், நகர அபிவிருத்தி, மற்றும் தொழில் பேட்டைகள் போன்ற இன்ன பிற தேவைகளை கருத்தில் கொண்டு சிறிய, நடுத்தர மற்றும் பாரிய நீர்நிலை மேம்பாட்டு திட்டங்களை தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் திட்ட வரைபுகளை உருவாக்கியது.
வட மாகாணத்தின் புதிய தலைநரமாக மாங்குளம் அபிவிருத்தி செய்யப்பட திட்டங்கள் உருவாக்கப்பட்ட போது எதிர்காலத்தில் ஏறக் குறைய 100,000 மக்கள் வசிக்கும் பாரிய நகரமாக மதிப்பீடு செய்யப்பட்டு மனித பயன்பாடு, சேவை நிறுவனங்களின் பயன்பாடு மற்றும் நகரத்தை அண்டிய பாரிய கைத்தொழில் மையங்கள் என்பனவற்றின் நீராதாரம் எங்கிருந்து பெறுவது என்ற கேள்வி எழுந்தது.
அந்த வேளையில்தான் மழை காலங்களில் யாழ் மாவட்டத்தில் இருந்து மன்னர், வவுனியா, முல்லைதீவு, கிளிநொச்சி பிரதேசங்களில் பொருண்மிய வேலை திட்டங்களை ஆய்வு செய்வதற்காக பயணம் செய்யும் போது மைய பகுதியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கடல் கரை நோக்கி வெள்ளம் பிரவாகித்து வீதிகளை குறுக்கறுத்து ஓடிய அனுபவங்கள் கை கொடுத்தது.
பரங்கியாறு நீர் தேக்கம் போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டு மாங்குளம் புதிய நகர் திட்டத்திற்கு தேவைப்படும் நீரை வழங்க முடியும் என்று கலந்தாலோசிக்கப்பட்டது.
ஆற்றுப் படுகைகளுக்குள் நீர் தேக்கும் திறனை அதிகரித்தல் மற்றும் புதிய நீர்த்தேக்கங்களை நிர்மாணித்தல் – அருவி ஆறு (கீழ் ஓடை), பரங்கி ஆறு (மேல் மற்றும் கீழ் ஓடை), பாலி ஆறு (கீழ் ஓடை), பெர் ஆறு (கீழ் ஓடை), மற்றும் மண்டைக்கல்லாறு (மேல் மற்றும் கீழ் ஓடை), அத்துடன் நுண்துளை மேற்பரப்புகளைப் பராமரிப்பதன் மூலம் நீர் பற்றாக்குறையின் தாக்கத்தைக் குறைக்கவும், அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்கவும் உதவும்.
பொருத்தமான இடங்களில் உரிய நீர் சேமிப்பு திட்டங்கள் மற்றும் காத்திரமான நீர் மேலாண்மை மூலம் வெள்ள அழிவு தடுக்கப்படவும், மானுடப் பயன்பாட்டிற்கான நீர் வழங்கலை அதி திறனுடன் கையாளவும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினால் உரிய நிறுவன கட்டமைப்புகளை உருவாக்கி நிபுணத்துவ ஆலோசனைகள் பெற்று எதிர்காலத்திற்குரிய நவீன திட்டங்கள் தீட்டப்பட்டன.