
பறிபோகும் மணலாறு என்னும் தாயக பூமி
இனப்பரம்பலை மாற்றும் எந்த குடியேற்றங்களையும் NPP முன்னெடுக்காது என்னும் தேர்தல் வாக்குறுதிக்கு என்னாயிற்று?
மணலாறில் நாலாயிரத்திற்கு மேற் பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளை நிலை நிறுத்தும் நோக்கோடு கிவுல் ஓயாத் திட்டம் முன்னெடுக்கப்பட இருக்கின்றது. அதற்கு இந்த வார அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியிருக்கின்றது. 2011 இல் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இந்தத் திட்டம் 417 கோடி ரூபா செலவில் முன்னெடுக்க முயற்சிக்கப்பட்டது. மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் L வலயத்தின் அபிவிருத்தி என்ற பெயரில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி நிலைநிறுத்தும் இந்தத் திட்டம் அப்போது எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
பின்னர் கோட்டாபய ராஜ பக்ஷவின் காலத்திலும் ஆரம்பிக்கப்பட்டு தமிழ் மக்களின் எதிர்பாலும் பொருளாதார நெருக்கடியாலும் கைவிடப்பட்டது. இப்போது அந்தத் திட்டத்தை 2,345 கோடி ரூபா செலவில் விரைந்து முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கும் மணலாறு பிரதேசத்தை வெலியோயாவாக பெயர் மாற்றிய தோடல்லாமல் முல்லைத்தீவின் பெரும் பகுதியை கபளீகரம் செய்ய அரசுகள் தொடர்ந்து முனைகின்றன.
இனப்பரம்பலை மாற்றும் எந்தக் குடியேற்றங்களையும் NPP முன்னெடுக்காது என்னும் தேர்தல் வாக்குறுதிக்கு என்னாயிற்று?